Saturday 3 September 2016

மறைக்கப்படுகிறதா நம் வரலாறு?


மரியானா பள்ளம் பற்றிய 2-வது பாகத்தின் இறுதியில் பத்து நிகற்புதம் மற்றும் அற்புதம் பற்றிக் குறிப்பிட்டு அவற்றைப் பற்றித் தேடித் தெரிந்து கொள்ளுமாறு எழுதியிருந்தேன். எத்தனை பேர் தேடினீர்கள் எனத் தெரியாது. 
சரியான முறையில் தேடல் நிகழ்ந்திருந்தால் ஒரு தகவல்பிழையைச் சுட்டிக் காட்டியிருக்க முடியும். பத்து நிகற்புதம் என்பதற்கு கும்பம் என்று பெயர். அதாவது பத்து பில்லியன் = கும்பம். கீழ்க்காணும் அட்டவணையைப் பாருங்கள்:

இவையெல்லாம் தமிழர்களின் அளவீட்டு முறைகள். நாம் இதுவரை பகுத்தறியாத அளவீட்டு வகைகளைக் கூட நம் முன்னோர்கள் குறித்து வைத்துள்ளனர் என்றால் நமது மூதாதையர்களின் அறிவு எத்தகையது?
நமக்கு பொதுவாக ஒரு குணம் உண்டு. ஏதாவது ஒரு வார்த்தையின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்வதற்காக அகராதியைப் புரட்டுவோம். அதை அடைந்த பிறகும் அந்த வார்த்தையோடு நாம் நிறுத்தி விடுவதில்லை. அதன் கீழ் உள்ள வார்த்தை, மேல் உள்ள வார்த்தை என பார்வை விரிந்து கொண்டே சென்று அதிலேயே மூழ்கி விடுவோம்.
இதில் தவறில்லை. தேடல் பெரிதானால் தான் வாழ்க்கை பற்றிய புரிதலும் விரியும். நாம் யார்? நம் சரித்திரம் என்ன? நம் முன்னோர்கள் என்னென்ன சாதனைகள் படைத்திருக்கின்றனர்?
பாரத நாடு பழம்பெரும் நாடு. நீர் அதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்! 
உலகிற்கே கலாச்சாரத்தையும், பண்பாட்டினையும் கற்றுக்கொடுத்த நாடு. மிகவும் பழமை வாய்ந்த, அதே சமயத்தில் நாகரிகமும் செழித்து வளர்ந்த நாடு. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பே திட்டமிட்ட வீடுகளுடனும் கழிவறைகளுடனும் வாழ்ந்த  நாடு. வாழும் கலையான யோகாவை இந்த உலகிற்கு கற்றுத்தந்த நாடு. எண்களை, அதிலும் முக்கியமாக பூஜ்ஜியத்தை உலகிற்கு அளித்த நாடு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த நாடு.
உலகின் முதல் மருத்துவ முறையான ஆயுர்வேதத்தை அறிமுகப்படுத்திய நாடு. நதிகளை இணைத்து நீர் மேலாண்மை, பாசன வசதி, தானாகவே சுத்திகரித்துக் கொள்ளும் விதமான கழிவுநீர் அமைப்பு என அனைத்து துறைகளிலும் உயர்ந்து விளங்கிய நாடு. 
வானியல், உலோகவியல், கட்டிடக்கலை, கணிதம், மருத்துவம், தர்க்கவியல், வரைபடவியல், கனிமவியல் என எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் மகத்தான பங்கை அளித்துள்ள நாடு.
மருத்துவம் 
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆயுர்வேத மருத்துவ முறைகளை கையாண்டார்கள் இந்தியர்கள். மருத்துவத்தின் தந்தை எனப்படும் சரக்கா, ஆத்ரேயா, தன்வந்தரி போன்ற மருத்துவர்கள் ஏராளமான மருத்துவக்  குறிப்புகளை எழுதி வைத்துள்ளார்கள். 
உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர் சுஸ்ருதா. மூன்றாம் நூற்றாண்டிலேயே கண்புரை அறுவைச் சிகிச்சையைச் செய்தார் இவர். ஒரு வளைந்த ஊசியின் மூலம் கண்புரை உள்ள விழியின் வில்லையை நீக்கி வெதுவெதுப்பான வெண்ணெயில் சில நாட்களுக்கு ஊற வைத்து அது குணமான பின்னர் மீண்டும் பொருத்தினார். சுஸ்ருதரிடமிருந்து சிகிச்சை பெற உலகெங்கும் இருந்தும் மக்கள் வந்தனர்.
வானியல் 
கோள்களின் இயக்கத்தையும், பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்பதையும் செயற்கைக் கோள்கள் அனுப்பி கண்டுபிடிக்கின்றனர் இன்றைய விஞ்ஞானிகள். இதனைக் கணிதச் சமன்பாடுகளால் ஏற்கனவே கணித்துச் சொல்லி விட்டார் ஆர்யபட்டா. உலகம் சூரியனைச் சுற்றி வர ஆகும் காலத்தை ஐந்தாம் நூற்றாண்டிலேயே கணித்துச் சொன்னார் பாஸ்கராச்சாரியா. ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாடு பற்றி நம் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்துத் திருமணங்களில் அருந்ததி பார்ப்பது என்பது முக்கியச் சடங்காகும். சப்தரிசி மண்டலம் (Ursa Major) வடக்கு வானில் இரவு நேரத்தில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்று. வசிட்டரும் அருந்ததியும் (Mizar and Alcor) சப்தரிசி மண்டலத்தின் ஒரு பகுதியான விண்மீன் குழுவாகும். இவை இரட்டை நட்சத்திரங்களாகும். பெரும்பாலான மற்ற இரட்டை நட்சத்திரங்களை போல அல்லாமல் இவை ஒன்றையொன்று இணையாக சுற்றி வருகின்றன.  புதுமணத்தம்பதிகள் இந்த இரட்டை நட்சத்திரங்களை பார்த்து அவர்களை போலவே இணைபிரியாது வாழ வேண்டும் என்பதற்காக வானில் அருந்ததி பார்த்து ஆசி பெறும் நிகழ்வும் நடைபெறுகின்றது. இந்த இரட்டை நட்சத்திரங்களின் இவ்வியல்பை எந்த செயற்கைக்கோளை அனுப்பி தெரிந்து கொண்டனர் நம் முன்னோர்கள்?
ஒளியின் வேகம் வினாடிக்கு ஒரு லட்சத்து எண்பத்து ஆறாயிரம் மைல்கள் என்பதை நவீன அறிவியல் சென்ற நூற்றாண்டில் தான் உறுதிப்படுத்தியது. ஆனால் இதை அன்றே குறிப்பிட்டிருக்கின்றது உலகின் மிகப் பழைமையான ரிக் வேதம்.
வானியலில் பல்வேறு எல்லைகளை நம் முன்னோர்கள் ஏற்கனவே தொட்டுவிட்டனர். தற்கால விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் அவற்றை மெய்ப்பிக்க மட்டுமே செய்கின்றன.
கல்வி 
இயற்கணிதம், நுண்கணிதம், கோணவியல், வடிவியல் போன்றவை உருவானது இங்கே தான். உலகின் முதல் பல்கலைக்கழகமான தக்சசீலாவிற்கு உலகெங்கிருந்தும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து கல்வி பயின்றனர். இப்பல்கலைக்கழகத்தில் அறிவியல், கணிதம், மருத்துவம், அரசியல், போர்த்திறன், ஜோதிடம், வானியல், இசை, மதம், தத்துவவியல் போன்ற அனைத்து கல்வி அம்சங்களும் பயிற்றுவிக்கப்பட்டது. நான்காம் நூற்றாண்டில் உருவான நாளந்தா பல்கலைக்கழகம் அனைத்து வசதிகளையும் கொண்ட முதல் பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது. பக்தியார் கில்ஜியால் அழிக்கப்பட்ட அதன் நூலகத்தில் இருந்த அநேக புத்தகங்களும் சூறையாடப்பட்டு விட்டன. இப்புத்தகங்கள் மட்டும் அழியாமல் கிடைத்திருந்தால்….?
உலோகவியல் 
உலோகக் களத்தின் கீழே வெப்பத்தை உண்டாக்கி பிறகு அந்தக் கலவையை குளிர வைத்து தேவையான உலோகத்தை பிரித்தெடுப்பது தான் பொதுவான வழக்கம். ஆனால் துத்தநாகம் (Zinc) அடங்கிய உலோகக் கருவினை வெப்பப்படுத்தும்போது அது 997 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் திரவமாக மாறுகிறது. அதனைத் தொடர்ந்து ஆயிரம் டிகிரி செல்சியஸை எட்டும்போது உடனடியாக வாயுவாக மாறிவிடுகிறது. 
மூன்றே டிகிரி வித்தியாசத்தில் திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு துத்தநாக கலவை மாறுவதால் அதனைப் பிரித்தெடுப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்களிடம் அதற்கான தொழில்நுட்பம் இருந்தது. உலோகக் களத்தை தலைகீழாக வைத்து அதன் மேற்பகுதியில் வெப்பமுண்டாக்கி கீழ்ப் பகுதியில் பெரிய பனிக்கட்டியை வைத்து அதன் மூலம் துத்தநாகம் வாயு நிலைக்கு சென்றுவிடாமல் திடநிலையில் பிரித்தெடுத்தனர்.
கலை 
மத்தியப்பிரதேசத்தின் ராய்சன் மாவட்டத்தில் உள்ள பீம்பேட்கா குகைகள் மூன்று லட்சம் ஆண்டுகள் பழமையானவை. அங்கு காணப்படும் 30 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலியோலித்திக் வகை ஓவியங்கள் அக்கால மனிதர்களின் வேட்டை முறை, நடனம் மற்றும் அவர்களின் பல்வேறு வாழ்க்கை முறையை எடுத்துச்சொல்லும் விதமாக இன்றும் நம்மிடையே இருக்கன்றன. ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பே அங்குள்ள குகைகளில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உலக நாடுகள் எல்லாம் செம்பு, தோல் ஆகியவற்றை நாணயங்களாகப் பயன்படுத்திய காலத்தில் இந்தியா தங்கத்தை நாணயமாகப் பயன்படுத்தியிருக்கிறது. இந்தியாவிலிருந்த தங்கத்தின் அளவு வேறெந்த நாட்டிலும் இல்லை. (‘இப்ப மட்டும்’ என்பவர்களுக்கு என் அன்பு!) மற்ற நாடுகள் கற்கால நாகரிகத்தோடு ஆடையென்ற ஒன்றையே அறிந்திராத காலத்தில், பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகள் உடுத்தி நாகரிகத்தில் திளைத்தவர்கள் நாம்.
உலகின் முதல் கப்பற்படை தமிழர்களுடையது. தெற்கு ஆசியாவை தம் வசப்படுத்தியிருந்தனர் சோழர்கள். கடல்வழிப் பயணங்களின் முன்னோடிகள் நாம். மிகப்பெரிய மரக்கலத்தை உருவாக்கி காற்றின் திசைகளை கொண்டு பயணம் செய்தது மட்டுமல்லாமல் கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியுள்ளார்கள். கப்பலை தோற்றுவித்து கப்பல் கட்டும் கலையில் சிறந்து விளங்கியதும் நாம்தான்.
வாஸ்கோடகாமா இந்தியாவைக் கண்டுபிடிப்பதற்காக பயணம் செய்து கோழிக்கோட்டிற்கு பிறகு கோவாவை அடைந்தபோது அவரை வரவேற்றது ஒரு குஜராத்தி வணிகர். வாஸ்கோடகாமாவினுடையது அப்போதைய ஐரோப்பாவின் மிகப்பெரிய கப்பல். அவரது கப்பலை விட பன்னிரண்டு மடங்கு பெரியதாக இருந்தது இந்த வணிகக்கப்பல் என்றால் நமது கப்பல் கட்டும் தொழில்நுட்பம் பற்றி மேலும் சொல்லத்தான் வேண்டுமா?
கப்பல் மட்டுமா? இராவணன் சீதையைக் கவர்ந்து, புஷ்பக விமானத்தில் பறந்து சென்ற கதையைப் படித்திருக்கிறோம். பாரத்வாஜரின் விமானங்களின் சாஸ்திரத்தில் மூன்று வகையான விமானங்களை பற்றிக் குறிப்பிடுகிறார். அவை, பூமியில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் விமானங்கள், ஒரு கோளிலிருந்து மற்றொரு கோளிற்கு செல்லும் விமானங்கள் மற்றும் ஒரு பிரபஞ்சத்திலிருந்து மற்ற பிரபஞ்சங்களுக்கு செல்லும் திறன் பெற்ற விமானங்கள் ஆகும். மேலும் விமானங்களை மறையச்செய்யும் திறன், மறைந்திருக்கும் விமானத்தை காண வைத்தல், ஒரு விமானத்தில் பேசும் ஒலியையும், அதன் காட்சியையும் மற்றொரு விமானத்தில் செல்லும் நபர்கள் காணும் திறன் போன்ற தொழில்நுட்பங்களைப்பற்றியும் அதில் விளக்குகிறார். 
ஞாபக சக்தியில் உயர்ந்து விளங்கினர் நமது முன்னோர்கள். வேதங்களெல்லாம் செவிவழியாகவே அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப்பட்டன.
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
நதிகளோ ஏராளம். அந்த நதிகளையொட்டிப் பரவிய நாகரீகத்தால் மாபெரும் விவசாய நாடு. விளையாத பயிர்கள் இல்லை. உற்பத்தியில் உலகிலேயே முன்னணியில் இருக்கும் நாடு. பரந்து விரிந்த குடி நீர்ப்பரப்பு. மனிதர்களை போலவே கால்நடைகளின் எண்ணிக்கையும் அதிகம். தங்கம், வைரம், இரும்பு, செம்பு, கிராஃபைட், பெட்ரோல், யுரேனியம் எனக் கிடைக்காத கனிமங்கள் இல்லை.
பாலை மணலைத் தவிர வேறு ஒன்றுமில்லாத துபாய் மிகப்பெரும் வர்த்தக நகரமாய் இருப்பது எப்படி? எந்த இயற்கை வளமும் இல்லாத சிங்கப்பூர் போன்ற சிறிய நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேறிக் கொண்டே இருக்கும் போது எல்லா வளமும் இருந்தும் நம் நாட்டிற்கு ஏன் இந்த நிலை? 
சரி, இந்தியாவின் நிலை தான் இப்படி. நமது தமிழகத்துக்கு வருவோம்.
தமிழ் இனத்தின் வரலாறு என்பது மிகத்தொன்மையானது. கல் தோன்றி மண் தோன்றாக்காலத்து முன் தோன்றிய மூத்த குடிகள் நாம். பண்பாடு, நாகரிகம் மற்றும் கலை எனக் கொடி கட்டிப்பறந்து அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கிய ஒரு இனம் தமிழ் இனம்.
உண்மையில் மனிதன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியா கண்டமே. இங்கு தோன்றிய மனிதர்கள் தான் மற்ற இடங்களுக்கு சென்று நாகரிகங்களைப் பரப்பியிருக்கிறார்கள். உலக நாகரிகம் சிந்து சமவெளியிலோ, சுமேரியாவிலோ அல்லது மெசபடோமியாவிலோ தோன்றியது அல்ல. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்கு, ஐந்தாயிரம் வருடங்கள் பழமையானது தான். ஆனால் தமிழ் நாகரிகம் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முந்தையது. 
அறிவியல் உலகம் எதையும் ஆராய்ந்து பார்த்து தெளிவு படுத்திய பின்னரே ஏற்றுக்கொள்ளும். குமரிக்கண்டத்தினைப்பற்றி இன்னும் முழுமையாக அறிவியல் உலகம் ஆராயவே இல்லை. அங்கிருக்கும் ரகசியங்கள் இன்னும் ரகசியங்களாகவே இருக்கின்றன. 
நமது பூம்புகாரின் ஒரு பகுதி கடலில் மூழ்கியுள்ளது. இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் 1993-ல் பூம்புகாரில் ஆய்வு மேற்கொண்டது. பின்னர் பணப் பற்றாக்குறையைக் காரணம் சொல்லி ஆய்வுகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் 1990-களில் துவாரகையிலும் இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பணப்பற்றாக்குறை ஏற்படவேயில்லை. ஆனால் துவாரகையில் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. பூம்புகாரில் முதற்கட்ட சோதனைகளின்போதே சான்றுகள் கிடைத்தன.
பூம்புகாரின் ஆய்வுகள் தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்பதற்காக நிறுத்தப்பட்டதா? 
இங்கிலாந்தினைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான்காக். இவர் உலகெங்கும் பயணம் செய்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருபவர். நிதிப்பற்றாக்குறையினால் ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதை அறிந்த அவர் இந்தியக் கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களின் நிதியுதவியோடு 2001-ல் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

அதிநவீன உபகரணங்களோடு செய்யப்பட்ட அந்த ஆராய்ச்சியில் பூம்புகாரின் கடற்பகுதியில் மூன்று கிலோமீட்டர்கள் தொலைவில் சுமார் எழுபத்தைந்து அடிகளுக்குக் கீழே ஒரு பிரம்மாண்டமான நகரம் மூழ்கியிருப்பது தெரியவந்தது. ஆங்கில எழுத்தான ‘U’ போன்ற அல்லது குதிரையின் லாடம் போன்ற ஒழுங்கற்ற வடிவத்தில் உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களும் இடிபாடுகளுடன் காணப்பட்டன.

இந்த அகழ்வு ஆய்வினைப்பற்றிய ஆவணப்படங்கள் வெளிநாடுகளின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்தின் தர்ஹாம் பல்கலைக்கழகமும் இந்த ஆய்வின் முடிவுகளை ஏற்றுக்கொண்டுள்ளது.
இங்கு மேலும் ஆராய்ந்தால் இன்னும் பல அரிய உண்மைகள் வெளிவரும்.  இந்த இடத்தை ஏன் ஆராயாமல் விட்டுவைத்திருக்கிறார்கள் என்பது புதிராக இருக்கிறது என்று கூறுகிறார் அவர். கிரஹாம் ஹான்காக்கின் ஆராய்ச்சிகளுக்குப் பிறகும் நமது இந்திய அரசு மேற்கொண்டு எந்த வித ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இந்த ஆவணப்படமும் இந்தியத் தொலைக்காட்சிகளில் காட்ட அனுமதி மறுக்கப்பட்டது.

நமது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகள் தொடர்பான செய்திகள் தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. இது தவிர மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும் தமிழகத்தின் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
நமது வரலாறு திட்டமிட்டே மறைக்கப்படுகின்றனவா என்கிற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.
கடலின் சிறிது தொலைவில் செய்யப்பட்ட ஆய்வுகளே பூம்புகாரின் காலம் 9500 ஆண்டுகளுக்கு முன் என்கின்றன. யார் கண்டார்..? இன்னும் ஆய்வுகளை விரிவாக்கினால் உலகத்தின் வரலாறே திருத்தப்படலாம்.
ஒரு மாபெரும் நகரமே வரலாற்றுப் புதையலாய் கடலோரத்தில் புதைந்து கிடக்கிறது. அந்த நகரைப்பற்றிப் புகழ்ந்து பாடிய பட்டினப்பாலை என்ற நூல் நம்மிடத்தில் இருக்கிறது. ஆனால், அந்த நகரமோ கடலின் அடியில் வரலாற்றை அசை போட்டபடி காத்திருக்கிறது.
அண்ணன் ராஜ்சிவா "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?" என்ற ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அவர் கேட்டிருந்தது வேற்றுக்கிரக வாசிகளைப் பற்றிய தகவல்களை நம்மிடமிருந்து மறைக்கப்படுகின்றதா என்று.
ஆனால் இந்த உண்மைகள் ஏன் மறைக்கப் படுகின்றன?


Friday 26 August 2016

நீச்சல் குளத்தையே கண்டிராத நீச்சல் வீரர்!- ஒலிம்பிக் விநோதம்!



ம். தலைப்பு பொய் சொல்லவில்லை. எரிக் முசாம்பனி மலோங்கா ஒரு பெரிய நீச்சல் குளத்தை, ஒலிம்பிக் போட்டிக்கு நேரில் சென்ற பின்னர்தான் முதன்முறையாக கண்டார். ஒரு தேசத்தின் கனவு அது.

அது ஒரு அழகான ஏப்ரல் காலை. தன் தங்கைகளுடன் அமர்ந்து காலை உணவை ருசித்துக் கொண்டிருந்தார் எரிக். அப்போது வானொலியில் ஒலிபரப்பான ஒரு விளம்பரம் அவரை ஈர்த்தது. ஒலிம்பிக் பந்தயத்தில் நீச்சல் வீரர்களை தேர்வு செய்யும் போட்டி நடைபெறுவதற்கான அறிவிப்பு அது. நாம் ஏன் முயற்சி செய்யக்கூடாது?., என்று சிந்தித்தார் எரிக். அவரது வாழ்க்கையை மாற்றப்போகும் சிந்தனை அது என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

இத்தனைக்கும் அவர் முறையாக நீச்சல் பயிற்சி பெற்றவரில்லை. கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். ஆனால் எதிலும் தனித்திறமை கிடையாது. விளையாடத்தெரியும், அவ்வளவு தான். தவிர சைக்கிள் ஓட்டுவதிலும் ஆர்வம் இருந்தது. ஏழ்மை காரணமாக சொந்தமாக வாங்க இயலாது நண்பர்களினுடையதை ஓட்டி மகிழ்வது வழக்கம். ஆனால், நீச்சல்? கடலில் ‘தையத்தக்கா’ என்று நீச்சலடித்த அனுபவம் மட்டுமே உண்டு.

2000-ம் ஆண்டு செப்டம்பரில் துவங்கவிருந்தது, ஆஸ்திரேலியாவின் சிட்னி ஒலிம்பிக்ஸ். அதில் வளரும் நாடுகளும் பங்கேற்பதை ஊக்குவிக்க சிறப்பு தகுதியாக நேரடி அனுமதி கிடைத்திருந்தது, ஈக்குவேட்டரியல் கினியாவிற்கு. இது ஆப்பிரிக்காவின் எண்ணெய் வளம் மிக்க சிறிய நாடு.

போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மலாபோ என்ற ஊரிலிருந்த ஹோட்டல் உரிக்காவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு காரணம், கினியா நாட்டிலிருந்த ஒரே நீச்சல் குளம் அங்குதானிருந்தது. அன்றைய கணக்கீட்டின்படி ஐந்தேகால் லட்சம் மக்கள் தொகை கொண்ட கினியா நாட்டில் இருந்த ஒரே நீச்சல் குளம் ஒரு ஓட்டலில் இருந்தது. அதிலும் அந்த நீச்சல் குளத்தின் மொத்த நீளம் வெறும் 12 மீட்டர் மட்டுமே!

காலையில் சுறுசுறுப்பாகக் கிளம்பி முதல் ஆளாகப் போய்ச் சேர்ந்தார் எரிக். அவரைத்தவிர அங்கு போட்டிக்காக வந்திருந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒரே ஒரு பெண் மட்டுமே. ஆம். போட்டிக்காக வந்தவர்கள் வெறும் இரண்டே பேர் தான்.
நீச்சலடிக்கத் தெரியுமா என்று இருவரிடமும் கேட்கப்பட்டது. நீந்திக்காட்டினார்கள். அவ்வளவு தான். ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள கினியா நாட்டின் நீச்சல் வீரர்கள் தயார்! இருவரிடமும் அவர்களது பாஸ்போர்ட், புகைப்படம் போன்றவற்றை தயார் செய்யுமாறு சொல்லி கைகுலுக்கி அனுப்பி விட்டனர்.  

"தீயா வேலை செய்யணும் குமாரு! போய் நல்லா பயிற்சி எடுத்துட்டு வா" என்றனர் ஏற்பாட்டாளர்கள்.
"பயிற்சியாளரை எங்க போய் நான் பார்க்கணும்?" என்ற எரிக்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. "அந்த வெட்டிச்செலவெல்லாம் எதுக்கு? தேவையில்லை. நீயாவே பயிற்சி எடுத்துக்கோ" என்று சொல்லி விட்டனர்.

நீச்சலில் பலவகைகளுண்டு. எந்த வகைக்கு எப்படி நீந்த வேண்டும் என்று தெரியாது. அதிலும் போட்டிக்காக நீந்துதல் என்பது தனி வகை. நீச்சல் குளமும் இல்லை. ஆறுகளிலும், கடலிலும் தனக்குத் தெரிந்த மாதிரி நீச்சல் பயிற்சி செய்தார் அவர். வார இறுதியில் மட்டும் அந்த பன்னிரெண்டே மீட்டர் நீளமுள்ள நீச்சல் குளத்தில் இரண்டு மணி நேரம் பயிற்சி.

ஒலிம்பிக் விளையாட்டுகள் என்பது ஒரு பிரம்மாண்ட நிகழ்வு என்பது மட்டும் தெரியும். அவரது ஒரே மகிழ்ச்சி தாய் நாட்டின் சார்பாக வெளிநாட்டுக்கு, அதிலும் வெகு தொலைவிலிருக்கும் நாட்டிற்கு பயணம் செய்து ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளப்போகிறோம் என்பதே.

கையில் 3500 ரூபாய் பணமும் துவக்க விழாவன்று கையில் எடுத்துச் செல்ல அவரது தாய்நாட்டின் கொடியும் கொடுத்து விமானமேற்றி அனுப்பி விட்டனர். லிப்ரெவில்லே, பாரிஸ், ஹாங்காங் அதன் பிறகு சிட்னி என்று மூன்று நாட்கள் நீடித்தது அவரது அந்த நீண்டதூரப்பயணம்.  சிட்னி சென்று இறங்கியதும் அவர் செய்த முதல் காரியம், போட்டி நடக்கும் நீச்சல் குளத்தை நேரில் சென்று பார்த்தது தான். அங்கு இரண்டு அதிர்ச்சிகளை சந்தித்தார் அவர்.

முதலாவது நீச்சல் குளத்தில் கயிறு மூலம் நேர்க்கோடுகள் வரையறுக்கப்பட்டிருந்தன. அதற்குள்ளாகத்தான் போட்டியாளர்கள் நீந்த வேண்டும். பன்னிரெண்டே மீட்டர் நீளமுள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்ற அவருக்கு ஐம்பது மீட்டர் நீளமிருந்த அந்த நீச்சல் குளம் பிரம்மாண்டமாய் தெரிந்தது. அதிலும் கோட்டிற்குள்ளாக நீந்த வேண்டுமென்பது அயர்ச்சியைத் தந்தது.



அதைக்கூட சமாளித்து விடலாம் என்று நினைத்தவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அது போட்டிக்காக நீந்த வேண்டிய தூரம் நூறு மீட்டர் என்பது. அவரைத் தேர்ந்தெடுத்த ஏற்பாட்டாளர்கள் "சும்மா அம்பது மீட்டர் தான்யா... அசால்ட்டு!" என்றிருந்தார்கள். அவரும் அதற்கேற்றவாறே பயிற்சி மேற்கொண்டிருந்தார்.


வந்தாகி விட்டது. வேறு வழி? அங்கு நீச்சல் குளத்தில் பயிற்சி பெற வந்திருந்த அமெரிக்கர்களை பார்த்து தானாகவே தொழில்(!) பழக ஆரம்பித்தார். எப்படி நீச்சல் குளத்தில் பாய்வது?., கைகளை அசைப்பது எப்படி?., கால்களை அசைப்பது எப்படி?., என எல்லாமே பார்த்துப் பார்த்துத் தெரிந்து கொண்டார். இவரது நடவடிக்கைகளை பார்த்து சந்தேகப்பட்டார் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பயிற்சியாளர் ஒருவர். இவரும் ஒரு போட்டியாளர் தான் என்று உறுதி செய்து கொண்ட பின் தன்னிடமிருந்த இரண்டு புதிய நீச்சலுடைகள், போட்டியின் போது அணிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்புக் கண்ணாடி போன்றவற்றைக் கொடுத்து உதவினதோடு மட்டுமல்லாமல், கொஞ்சம் நீச்சல் பயிற்சியும் அளித்தார்.

அந்த நாளும் வந்தது. முதல் சுற்றில் அவருடன் போட்டியிட ஒரு நைஜீரியரும் தாஜிகிஸ்தானைச் சேர்ந்த மற்றொருவரும் என மேலும் இரண்டு போட்டியாளர்கள் இருந்தனர். சோதனையாக இருவரும் அவசரப்பட்டு நீச்சல் குளத்தினுள் தாவி விட்டதனால், தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டனர். அடுத்து என்ன என்று எரிக்குக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தன்னை நேரடியாக தேர்ந்தெடுத்து விடுவார்களோ?

அதற்கான விடை உடனே தெரிவிக்கப்பட்டது. எரிக் போட்டி போட வேண்டியது மனிதர்களுடன் அல்ல. நேரத்துடன். அதாவது தகுதி பெற நூறு மீட்டர் தொலைவை அவர் 1:10 நிமிடங்களுக்குள் நீந்த வேண்டும். அதுவும் தன்னந்தனியாக.

இவ்வாறு எரிக்கின் அந்த உலகப்புகழ் பெற்ற நீச்சலானது 17,000 மக்களின் முன்னிலையில் துவங்கியது. தன்னுடைய முதல் ஐம்பது மீட்டர் தொலைவை வேகமாகவே நீந்தினார் எரிக் முசாம்பனி. (47 வினாடிகள்) அவரது அத்துணை ஆற்றலையும் பயன்படுத்தினார். என்ன நடந்தாலும் சரி, இடையில் மட்டும் நிறுத்தி விடக்கூடாது என்ற உறுதி மனதில் ஓடிக்கொண்டிருந்தது.



ஐம்பது மீட்டரைத் தொட்டுவிட்டு திரும்பும் போது மிகவும் களைப்பாக உணர்ந்தார். கை, கால்கள் அசைப்பது சிரமமாக இருந்தது. சற்றுத் தடுமாறினார். தற்போது உலகமே நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த போட்டியை இறுதி வரை நீந்தி முடிக்க வேண்டும். அப்போது போட்டியினை வர்ணனை செய்து கொண்டிருந்த ஆட்ரியன் மூர்ஹவுஸ் ‘இதெல்லாம் தேவையா? எப்ப வேணா கயிறைப் புடிச்சுட்டு நிக்கப்போறான் பாரேன்’ என்றார் இளக்காரமாக. 1988 சியோல் ஒலிம்பிக்கில் இதே போட்டியில் தங்கம் வென்றவர் இவர்.


என் குடும்பம், என் நண்பர்கள், என் உறவினர்கள், என் தேசம், ஏன் இந்த உலகமே நம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. நேரத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நம் தேசத்தினை உயர்த்திப் பிடிக்க வேண்டிய தருணத்தை விட்டுவிடாதே என அவர் மனது ஆர்ப்பரித்தது. அப்போது போட்டியினை பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியர்களின் உற்சாகப்படுத்தும் குரல்கள் கேட்கத் தொடங்கின. அது அவருக்கு மேலும் பலத்தைக் கொடுத்தது. எஞ்சியிருந்த சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி நீந்தினார்.

இறுதியில் ஒரு நிமிடம் 52.72 வினாடிகளில் நீந்தி முடித்தார். தகுதி பெற 1:10 நொடிகளுக்குள் நீந்தியிருந்திருக்க வேண்டும். இது தான் ஒலிம்பிக் வரலாற்றிலேயே மிகவும் அதிகமான நேரம் என்று வரலாற்றில் பதிவானது. அதனாலென்ன? அனைத்து மீடியா வெளிச்சமும் எரிக் முசாம்பனி மீது விழுந்தது அப்போது தான்.

’மக்கள் இதை ரசித்தாலும் எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை’ என்றார் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக இருந்த ஜாகுவஸ் ரோஜ் வெளிப்படையாக. வெற்றி பெற வாய்ப்பில்லாதவர்களை எல்லாம் போட்டியில் கலந்து கொள்ள வைத்து ஒலிம்பிக்கின் பெயரையே கெடுக்கிறார்கள் என்ற வசவும் சொன்னார்கள் சிலர்.

ஆனால் நவீன ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கப்படும் பாரோன் பியரே டி கூபெர்டின் இந்த எதிர்மறையான வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. வளரும் நாடுகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்கத்தான் வேண்டும் என்றார் பிடிவாதமாக. ஒருவரின் போராட்டக் குணத்தை வெளிப்படுத்த இதுவே வாய்ப்பாகும். ஒலிம்பிக் போட்டிகளின் நோக்கம் போட்டிகளில் வெற்றி பெறுவது மட்டுமல்ல, ஒற்றுமையுடன் அனைவரும் பங்கேற்பதே, என்றார் அவர்.



பின்னாட்களில் நூறு மீட்டர் தொலைவை 57 வினாடிகளில் நீந்தும் அளவுக்கு பயிற்சி பெற்று 2004-ல் ஏதென்சில் நடைபெற இருந்த ஒலிம்பிக்கில் இடம் பெறத்துடித்தார் எரிக். ஆனால் அவருக்கு விசா கிடைப்பதற்கு ஏற்பட்ட குளறுபடிகளினால் பங்கேற்க முடியவில்லை. அவர் போட்டியில் மீண்டும் பங்கேற்பதைத் தவிர்க்கவே விசா குளறுபடிகள் உண்டாக்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டது


அவரது 34-வது வயதிலும் 55 வினாடிகளில் நீந்திக் காண்பித்தார் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத எரிக் முசாம்பனி. 'எனக்கு இன்றும் ஒரு கனவு உள்ளது. நான் என்னை மேம்படுத்திக் கொண்டு விட்டேன். என்னால் 100 மீட்டர் தொலைவை இன்னும் குறைவான வினாடிகளில் நீந்த முடியும் என்பதை இந்த உலகிற்கு காட்ட வேண்டும்' என்கிற எரிக் முசாம்பனி, இன்றும் காலை ஐந்து மணிக்கு எழுந்து மூன்று கிலோ மீட்டர்கள் ஓட்டம், உடற்பயிற்சிகள் முடித்து எட்டு மணியிலிருந்து ஐந்து மணி வரை வேலை செய்து விட்டு ஆறு முதல் பத்து மணி வரை மற்றவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார். ஆம். இப்போது ஈக்குவேட்டரியல் கினியாவில் நீச்சல் குளங்கள் இருக்கின்றன.



அன்று நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பேட்டிகள், உலகின் பல்வேறு பத்திரிக்கைகளிலும் செய்தி என ஊடக வெளிச்சத்தில் மிதந்தார் எரிக் முசாம்பனி. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாவிட்டால் என்ன?., நாங்கள் தருகிறோம் என ஒரு இங்கிலாந்து பத்திரிக்கை அவருக்கு ஒரு பதக்கத்தை அளித்தது. ஜெர்மனியைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம், அவரை சிட்னி ஹார்பரை சுற்றி கப்பலில் அழைத்துச் சென்றது. சென்ற இடமெல்லாம் ரசிகர்கள் இவரது கையெழுத்துக்காக காத்திருந்தனர். அமெரிக்கத் தொலைக்காட்சியில் இவரைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. எரிக் ஒரு விலாங்கு மீன் என்று புகழப்பட்டார்.

’என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஏனென்றால், நான் போட்டியில் வெல்லவே இல்லை. ஆனால், இப்போது எல்லோருக்கும் எனது தாய்நாட்டைப் பற்றி தெரிய வந்திருக்கிறது. அதிலெனக்கு சந்தோஷமே’ என்றார் எரிக் முசாம்பனி.

2012 முதல் தேசிய நீச்சல் அணியின் தலைமைப் பயிற்சியாளராய் பொறுப்பேற்று நீச்சல் வீரர்களை உருவாக்கி வருகிறார். நீச்சல் குளங்களே இல்லாத நாடாய் இருந்த கினியாவில் நீச்சல் குளங்கள் உண்டாக்கி அவருக்கு கிடைக்காத பயிற்சி மற்றவர்களுக்கு எளிதில் கிடைக்க வழி செய்திருக்கிறார்.

துரதிருஷ்டவசமாக ரியோ ஒலிம்பிக்கிற்கு அவர்கள் எவரும் தகுதி பெறவில்லை. அதனாலென்ன.... அடுத்த ஒலிம்பிக் காத்திருக்கிறது.

அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு மாபெரும் தேசத்திற்கும் இப்படியான கனவுகள் இருக்கின்றன. ஏராளமான திறமைகள் நாடெங்கும் கண்டுகொள்ளப்படாமல் சிதறிக் கிடக்கின்றன. கனவுகள் நிறைவேறுமா?

Friday 5 August 2016

மலைக்க வைக்கும் மரியானா பள்ளம்... ஆழ்கடல் பயணத்தின் ஆச்சர்ய தகவல்கள் ( பகுதி -2 )

ந்த ஆழத்தில் பிராண வாயு இல்லாமலும், அதிகபட்ச அழுத்தத்தைத் தாங்கிக் கொண்டும் உயிர்கள் வாழ்வது கடினம் என்றும் உயிரியலாளர்கள் எண்ணினார்கள். அவர்களை ஆச்சர்யப்படுத்தும் விதமாக அந்த ஆழத்திலும் ஜெல்லி மீன்களும், சிறிய தட்டை வடிவ மீன்களும் நீந்திக் கொண்டு இருந்ததை இருவரும் கண்டார்கள். சுமார் இருபது நிமிடங்கள் மட்டுமே அவர்கள் அங்கு செலவிட்டார்கள். பின்னர் வெற்றிகரமாக மேலே இருந்த கப்பலை அடைந்தனர்.
இவர்களுக்குப் பிறகு, சுமார் ஐம்பது ஆண்டுகள் வரை மரியானா ஆழ்கடலில் இறங்கி ஆராய எவரும் துணியவில்லை. ஆனால் 2005 முதலே அதற்காகத் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்து வந்தார் ஜேம்ஸ் கேமரூன். பலமுறை ஆழ்கடலுக்குள் மூழ்கி, பயிற்சி பெற்று வந்தார்.
ஆழ்கடலுக்கும் அவருக்கும் உள்ள பிணைப்பு வேறு எவருக்கும் இல்லாதது என்று சொல்லலாம். ஏனெனில், 1989-லேயே அபைஸ் எனும் ஆழ்கடல் பயணம் குறித்த படத்தை அவர் எடுத்திருந்தார். இதுவரை அந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் உடனே தேடிப் பார்த்து விடுங்கள். ஆழ்கடலில் விசித்திர உலகம் ஒன்று இயங்குவதாகப் படத்தை அவர் முடித்திருந்தார்.


அப்போது முதல் 80 முறை (பின்னர் டைட்டானிக்குக்காகவும்) ஆழ்கடல் பயணம் மேற்கொண்டார்.

2012-ம் ஆண்டு, ஜேம்ஸ் கேமரூன் 24 அடி நீளமும் 12 டன் எடையும் கொண்ட, 'ஆழ்கடல் சேலஞ்சர்' எனும் நீர்மூழ்கியில் தனியொருவனாக பயணித்தார். இந்த நீர்மூழ்கியினை ரோன் ஆலம் என்பவரின் உதவியோடு அவரே வடிவமைத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட இந்தக்கலம், அறிவியல் சோதனைக்குத் தேவையான உபகரணங்களுடன் 3டி கேமராவும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சோதனை செய்வதற்காக மண்ணை அள்ளும் மின்கைகளும் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றை உள்ளிருந்தபடியே அவரால் இயக்க முடியும். நீர்முழ்கியின் உள்ளே அவர் அமர்ந்து செயல்படும் இடம் வெறும் மூன்றரை அடி அகலம்  உடையதாகவே  இருந்தது. வெளிப்புறம் இரும்பால் ஆன 64 மில்லி மீட்டர் அளவுக்கான இடம் மட்டுமே இருந்தது.
இந்த நீர்மூழ்கியை செங்குத்தாக மட்டுமே பயணிக்கும்படி வடிவமைத்திருந்தனர். ராக்கெட்டுகளில் உபயோகிக்கக்கூடிய thrusters மூலம், நெக்கித் தள்ளுதல் முறையில் தரைத்தளத்தில் பயணிக்க இயலும். இதனுடன் நிலைப்படுத்துவதற்காக 500 கிலோ எடை இணைக்கப்பட்டிருந்தது. அது விடுவிக்கப்படும்போது கலம் மேலே எழும்பும். ஒருவேளை அது வேலை செய்யத் தவறினால் மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.
கேமரூன் ஏற்கனவே 27000 அடி வரை இறங்கியிருந்தார். மேலும், பல சோதனை பயணங்களுக்குப் பிறகு, வெற்றிகரமாக மரியானா அகழியின் சேலஞ்சர் பள்ளத்தில் இறங்கினார். இரண்டரை மணி நேரத்தில் 35,756 அடி ஆழம் தொட்டவுடன், அவர் கடலின் மேற்பரப்பில் இருந்தவர்களிடம் உரையாடியதை, “ 'இது ஒரு மனிதனின் சிறிய காலடி, ஆனால் மனித குலத்துக்கோ பெரும் பாய்ச்சல்'  என்ற நீல் ஆம்ஸ்ட்ராங் பேச்சைப்போல நான் தயார் செய்திருக்கவில்லை. நான் பேசியதெல்லாம் 'நண்பர்களே, 35756 அடிகள் தரையைத் தொட்டு விட்டேன். உயிர்காக்கும் கருவிகள் வேலை செய்கின்றன. அனைத்தும் நல்ல முறையில் இயங்குகின்றன' என்பது மட்டுமே." என  நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார்.
கடல் நீரின் அழுத்தத்தை தாங்கும் திறனை சோதிக்க, அவருடன் ஒரு ரோலெக்ஸ் கடிகாரமும் பயணித்தது. அந்த அதிகபட்ச நீரின் அழுத்தத்திலும் அது நன்றாக வேலை செய்தது. ரோலெக்ஸ் நிறுவனமும் இந்த முயற்சிக்கு நிதியுதவி செய்திருந்தது. முன்னர் மரியானா அகழிக்கு பயணித்த டான் வால்ஷ், பிக்கார்டும் கூட தங்களுடன் ரோலெக்ஸ் கடிகாரத்தை எடுத்துச் சென்றிருந்தனர்.
ஏற்கனவே சொன்ன உந்தித் தள்ளும் முறையில் ஒரு மைல் தொலைவு பயணித்தார் கேமரூன். அந்த பயணத்தின் வழியே சில ஆழ்கடல் விலங்கினங்களை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். மண்ணை அள்ளும் இயந்திரக்கை மூலம் மண் மாதிரிகளை சேகரித்தார். மரியானா அகழியில் ஐந்து மணி நேரம் இருந்து ஆராய திட்டமிட்டிருந்தார். இயந்திரக் கைகளின் எண்ணெய்க் கசிவின் காரணமாக,  வெளிப்புறக் கண்ணாடி மறைத்ததால் கேமரூனால் தொடர்ந்து எதையும் பார்க்க இயலவில்லை. இது தவிர நெக்கித் தள்ளும் அமைப்பும் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து கொண்டே வந்து,  கடைசியில் முழுவதுமாக நின்று விட்டது.
இதனால் மீதமிருக்கும் நேரத்தில், அறிவியல் ஆராய்ச்சிக்கான எந்த விதமான பணியிலும் ஈடுபட இயலாது என்ற சூழ்நிலையில், திரும்பச் செல்லும் முடிவெடுத்தார்.  இதன் காரணமாக அவரால் அடியில் இரண்டரை மணி நேரங்களே செலவிட முடிந்தது. 'இது ஒரு புதிய உலகிற்கு சென்று வந்தது, போலிருந்தது' என்று தம் பயணத்தைப் பற்றி கேமரூன் குறிப்பிடுகிறார்.
தவிர, அவரது வாழ்நாள் சாதனையாக இந்தப் பயணம் கருதப்படுகிறது. இந்த ஆழ்கடல் பயணம் ஒரு ஆவணப்படமாக நேஷனல் ஜியாகிராபிக் சானலில் வந்துள்ளது.

தற்போது அவர் எடுத்து வரும் அவதார் படத்தின் அடுத்த பாகங்களுக்காகத்தான் மரியானா அகழிக்குள் வந்தார் என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது. அதில் உண்மையில்லாமல் இல்லை. அவதார் பாகம் இரண்டில்,  பண்டோரா கிரகத்தின் கடல்சார் உயிரினங்கள் குறித்து அதிகம் இருக்கும் என்று சூசகமாக அவர் தெரிவித்திருக்கிறார்.     
கீழே உள்ள படத்தில், கேமரூன் சென்று வந்த கலமும் (Deepsea Challenger), டான் வால்ஷ் மற்றும் பிக்கார்டு சென்று வந்த கலமும் (Bathyscape Trieste) ஒன்றாக காட்டப்பட்டுள்ளன.


ட்ரெயிஸ்டி தற்போது அமெரிக்க அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. கேமரூன் பயணித்த கலமானது வேறொரு நிறுவனத்திற்கு தானமாக வழங்கப்பட்டு விட்டது. அந்த கலத்தை எடுத்துச் செல்லும்போது ஏற்பட்ட சிறு விபத்தில், அது பலத்த சேதமடைந்து விட்டது.
கடந்த சில மாதங்களாக ஒக்கியனோஸ் எக்ஸ்ப்ளோரர் எனும் கப்பல் மூலம் மேற்கொண்ட ஆராய்ச்சி மூலம் நிறைய புதிய உயிரினங்கள் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மரியானா அகழி குறித்தும்,  ஆழ்கடல் உலகத்தில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்பது குறித்தும் தொடர்ந்து ஆராய்ந்து வந்த வண்ணம் இருக்கிறார்கள், அறிவியலாளர்கள்.
மிகவும் ஆழமான பகுதிகளில் காணக் கிடைக்கும் வேறு சில உயிரினங்கள்:

மரியானா அகழியினுள் 47 மைல்கள் தொலைவுக்கு நான்கு பாலங்கள், பாலம் போன்ற அமைப்புகள் இருப்பதைக் கூட கண்டறிந்திருக்கிறார்கள். இவை 6600 அடிகள் உயரத்திலிருக்கின்றன. அதில் 1980-ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாலம், சேலஞ்சர் படுகுழிக்கு மேல் இரண்டரை கிலோமீட்டர் உயரத்தில் இருக்கிறது.
ஆழ்கடலில் நீரோட்டங்கள் காணப்படுகின்றன என்றும், அதன் மூலம் உயிர்கள் வாழும் சூழல் நிலவுகின்றது என்றும் கூறப்படுகிறது. தவிர மில்லியன் வருடங்கள் பழமையான பாறைகள், நீருடன் வினை புரிவதால் உண்டாகும் வாயுக்கள், தனிமங்கள் மூலம் உயிர்கள் உருவாவதாக ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
மரியானா அகழியினுள் நிலவும் கடும்குளிருக்கு நேர் எதிரான ஒரு விஷயமும் அங்கு இருக்கிறது. அவை சூடான காற்றை வெளியிடும் குழிகள். இவைகள் 450°C வெப்பமான சூடான காற்றை வெளியிடுகின்றன. அதிசயத்தக்க விஷயமாக இந்த நீர் கொதிப்பதில்லை. அங்கு இருக்கும் அழுத்தம் நீரின் கொதிநிலையை குறைத்து விடுகிறது. இவை, மூலம் தாதுக்களும் வெளியாகின்றன.
சேற்று எரிமலைகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மரியானா பள்ளத்திலும் சேற்று எரிமலைகள் காணப்படுகின்றன. சேற்று எரிமலைகள் என்பவை, எரிமலைக்குழம்பாக புதைச்சேற்றை வெளிப்படுத்துவன. நமது அந்தமான் தீவுகளிலும் இவ்வகை புதைச்சேற்று எரிமலைகள் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் வெளிவரும் வாயுக்களால் உயிர் வாழும் சூழல் உருவாகியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
கடல்களின் சராசரி ஆழங்கள்
ஆழ்கடலுக்குள், அடர்த்தியான கடல் நீரைத் துளைத்துக்கொண்டு மிகத்துல்லியமாக ஆழத்தைக் கணக்கிட்டு விட முடியாது. நூறு மீட்டர்கள் வரை வேறுபாடு இருக்கலாம். உலகெங்கும் உள்ள கடல்களின் சராசரி ஆழங்கள் வருமாறு...
ஆர்ட்டிக் பெருங்கடல்: 3400 அடி.  இதன் ஆழமான பகுதி 17881 அடியாகும். இந்தியப்பெருங்கடல்: 12740 அடி, இதன் ஆழமானப் பகுதி 25344 அடி ஆழமானது. அட்லாண்டிக் பெருங்கடல்: 12254 அடி, இதன் ஆழமானப் பகுதி 28374 அடியாகும். பசிபிக் பெருங்கடல்: 13740 அடி. உலகின் ஆழமானப் பகுதி, பசிபிக் பெருங்கடலில்தான் உள்ளது. அதன் ஆழம் 36200 அடி!
ஆயிரம் கோடி உயிரினங்கள்
மரியானா அகழியின் ஆள்கூறுகள்: 11"21' வடக்கு அட்ச ரேகை மற்றும் 142" 12' கிழக்கு  தீர்க்க ரேகை.  மரியானா அகழிக்கு அருகாமையிலிருக்கும் நாடு சுமார் முந்நூறு மைல்கள் தொலைவிலிருக்கும் சிறிய நாடான குவாம். இந்த குவாம், முதலில் ஸ்பெயினின் காலனியாக இருந்து, அமெரிக்காவின் பிடிக்கு வந்து, பின்னர் ஜப்பானின் கைக்குப் போனது. (பியர்ல் ஹார்பர் நினைவிருக்கிறதா?) இரண்டாம் உலகப்போரின் போது மீண்டும் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு வந்தது. மரியானா தீவுகள் ஜப்பானுக்கு தெற்கேயும், பப்புவா நியூகினியா தீவுகளுக்கு வடக்கேயும் பிலிப்பைன்சுக்கு கிழக்கேயும் அமைந்துள்ளன. மரியானா அகழியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
இந்தப்பூமியில் பத்து நிகற்புதம் உயிரினங்கள் வாழ்கின்றனவாம். அவற்றில் இன்னும் கண்டுபிடிக்கப்படாதவை அற்புதம். (என்ன வார்த்தைகள் சம்பந்தமில்லாமல் இருக்கிறது என்கிறீர்களா? பத்து நிகற்புதம் மற்றும் அற்புதம் என்றால் என்ன என கூகுளாண்டவரைக் கேட்கவும்)

மலைக்க வைக்கும் மரியானா பள்ளம்... ஆழ்கடல் பயணத்தின் ஆச்சர்ய தகவல்கள் ( பகுதி -1 )


ந்த உலகில் மனிதனின் காலடி படாத இடம் ஆழ்கடல்தான். ஏன் மனிதனின் காலடி பட வாய்ப்பே இல்லாத இடமும், ஆழ்கடல்தான். அது ஏன்? அறிந்து கொள்ள ஆழ்கடலுக்குள் பயணிப்போம் வாருங்கள்...
கண்களுக்கு முழுமையாக தென்படாத, விண்வெளியைப் போன்று எண்ணிலடங்கா ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றது, ஆழ்கடல்! கடலின் அடியிலும் வெளியிலிருப்பது போல ஏராளமான எரிமலைகள், பள்ளத்தாக்குகள், மாபெரும் மலைத்தொடர்கள், சிறு குன்றுகள் எல்லாம் இருக்கின்றன. கணக்கிலடங்காத எண்ணிக்கையில், கடல் வாழ் விலங்குகள் உயிர் வாழ்கின்றன. ஆனால், அவற்றைப்பற்றி எல்லாம் நாம் முழுமையாக அறிந்து கொண்டோமா என்றால் 'இல்லை' என்பதே பதில்.
பல்வேறு கிரகங்களுக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி ஆராய்ச்சி செய்து வரும் நாம், நமது பூமியிலிருக்கும் ஆழ்கடலை இன்னும் முழுமையாக ஆராய்ச்சி செய்து முடிக்கவில்லை. ஏனெனில், விண்வெளிப் பயணத்தை விட மிகவும் கடினமானது ஆழ்கடல் பயணம்தான்.
இதற்கு முக்கியக் காரணம், கடலின் அழுத்தம். நாம் கீழே செல்லச் செல்ல நீரின் எடை அதிகரித்து, அந்த எடை எல்லாப் பக்கங்களிலிருந்தும் நம்மை அழுத்தும். பத்து மீட்டர் ஆழத்தில் நீரின் அழுத்தம் இரண்டு மடங்காகி இருக்கும். அவ்வாறு ஒவ்வொரு பத்து மீட்டர் ஆழத்திற்கும் கடலின் அழுத்தமும் இரு மடங்காக, அதிகரித்துக்கொண்டே செல்லும். தவிர, இன்னுமொரு பிரச்னை உண்டு. சூரிய ஒளியானது சுமார் இருநூறு மீட்டர் ஆழம் வரையே ஊடுருவும் என்றாலும், ஆயிரம் மீட்டர் ஆழம் வரை ஓரளவு வெளிச்சம் தெரியும். அதன் பின்னர் கும்மிருட்டுதான்.  

  
நம்மால் சுவாசக் கருவி அணிந்து கொண்டு ஆயிரம் அடி வரை கூட இறங்க முடியும்.  ஆனால் நீண்ட நேரம் கடலின் ஆழத்தில் இருந்தால், கொப்புளங்கள், மூட்டுவலி போன்ற சில உடல் உபாதைகள் வரும் அபாயம் உண்டு. நீர்மூழ்கிக் கப்பல்கள் கூட ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்குக் கீழே பயணிக்காது. ஏனெனில், கடல் நீரின் அழுத்தத்தால் நீர்மூழ்கியும் வெடித்துச் சிதறி விட வாய்ப்பிருக்கிறது. இதனாலேயே ஆழ்கடல் குறித்த கேள்விகளுக்கு, வெகுநாட்களுக்கு விடை கிடைக்கவில்லை.

மரியானா அகழி
இந்த உலகிலேயே மிக ஆழமானப் பகுதி, மரியானா அகழியில் அமைந்துள்ள 'சேலஞ்சர் மடு' என்ற பள்ளம் தான். பசிபிக் கடலில் உள்ள ஆரம் போன்ற வளைவான மரியானா தீவுகளுக்குக் கிழக்கே அமைந்துள்ளது, மரியானா அகழி. வளர்பிறை போன்ற வடிவத்தில் அமைந்துள்ளதால், 'மரியானா நீள்வரிப்பள்ளம்' என்று அழைக்கப்படுகின்றது.

இந்த அகழியானது, பசிபிக் நிலத்தகடும், மரியானா நிலத்தகடும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது 2550 கிலோ மீட்டர் நீளமும், 69 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இதன் ஆழம் 35,840 அடி  ஆகும். சேலஞ்சர் ஆழப்படுகுழி 36200 அடி  (அதாவது 11034 மீட்டர்) ஆழமுடையது.
உங்கள் ஒற்றை விரல் நகத்தின் மீது ஆயிரம் கிலோ எடையை வைத்தால் எப்படி இருக்கும்? (படிக்கும் போதே வலிக்கிறது அல்லவா?) இப்பகுதியின் நீரினால் ஏற்படும் அழுத்தம் அந்த அளவுக்கு இருக்கும். (அதாவது 1086 பார்கள் அழுத்தம்) சேலஞ்சர் மடுவில் உள்ள நீரின் வெப்பநிலை, அதிகபட்சம் நான்கு டிகிரி செல்சியஸ் வரை. உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை இதனுள்ளே வைத்தால், அதற்கு பிறகும் ஏழாயிரம் அடி மிச்சமிருக்கும் என்றால், இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளலாம்.

மவுன கிய எரிமலை
இந்த சமயத்தில் ஒரு பொது அறிவுத்தகவல்- உலகிலேயே மிக உயரமான இடம் எவரெஸ்ட் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். பொதுவாக உயர அளவீடுகள், கடல் மட்டத்திலிருந்து அளவிடப்படுகின்றன. ஹவாய் தீவிலிருக்கும் 'மவுன கிய' எனும் எரிமலை,  கடல் மட்டத்திலிருந்து சுமார் 13802 அடி உயரம் உடையது. இந்த எரிமலை கடலினுள் அமிழ்ந்துள்ளது. அங்கிருந்து கணக்கிட்டால், இதன் உயரமானது 33000 அடியாகும். எவரெஸ்ட்டின் உயரம் 29029 அடிதான். எனவே உண்மையில், உலகிலேயே உயரமான இடம் மவுன கிய எரிமலைதான். கடல் மட்டத்திலிருந்து மட்டுமே கணக்கீடுகள் எடுக்கப்படுவதால் மவுன கிய எரிமலை அந்தப் பெருமையை எவரெஸ்ட்டிடம் இழந்து விட்டது.
மவுன கிய எரிமலையில் ஏராளமான தொலைநோக்கிகள் நிறுவப்பட்டுள்ளன. நகரங்களின் வெளிச்சம், ஓசை போன்ற மாசுக்கள் இல்லாமல் இந்த எரிமலையின் உச்சியில் நிலவும் சுற்றுப்புறமானது, வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது.
தற்போது இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒருங்கிணைந்து, சுமார் 140 கோடி அமெரிக்க டாலர் செலவில், உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை இந்த எரிமலையில் நிறுவி வருகின்றன. இதுதான் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாகும். இதன் மூலம் 500 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஒருவரின் சட்டையிலிருக்கும் பட்டனைக் கூட மிகத்துல்லியமாக ஆராய முடியும். இந்த மிகப்பிரம்மாண்ட தொலைநோக்கியின் கட்டுமானம் 2022-ம் ஆண்டுதான் முடியும்.
சிம்போரஸோ எரிமலை
சரி. நாம் மீண்டும் மரியானா அகழிக்கு வருவோம்.
சேலஞ்சர் மடுவின் தரைப்பகுதி, பூமியின் மிக ஆழத்தில் இருந்தாலும், அது பூமியின் மையத்திற்கு அருகில் இல்லை. ஏனென்றால், நமது பூமியின் ஒழுங்கற்ற வடிவமே இதற்கு காரணம். பூமி ஒரு முழுமையான வட்டமானது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். (பண்டை காலத்தில் உலகம் தட்டையானது என நினைத்துக் கொண்டிருந்தது தனிக்கதை!). ஆனால் பூமியானது ஒரு ஒழுங்கற்ற (சிறிது பேரிக்காய் போன்ற) வடிவத்தில் இருக்கிறது. தன்னைத்தானே சுற்றி வரும் மைய ஈர்ப்பு விசையின் காரணமாக பூமத்திய ரேகைப் பகுதியில் சற்று உப்பிக் காணப்படுகிறது. பூமியின் துருவங்களின் விட்டமானது, பூமி மையத்திற்கு நெருக்கமாக உள்ளது.  இதனால் பூமியின் மையத்திற்கு மிக அருகில் உள்ளது, ஆர்க்டிக் கடலின் தரைப்பகுதியே ஆகும்.
இப்போது மீண்டுமொரு பொது அறிவுத்தகவல்- உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் தானே பூமியின் மையத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் இடமாக இருக்கக் கூடும்? காதைத் தீட்டிக் கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு இன்னொரு ரகசியம் சொல்கிறேன். ஈக்குவடாரில் உள்ள சிம்போரஸோ எனும் எரிமலைதான், பூமியின் மையத்திலிருந்து அதிதொலைவு (20548 அடிகள்) உள்ள இடம். காரணம் இப்போது புரிந்திருக்குமே? எவரெஸ்ட்டை (29029 அடிகள்) விட உயரம் குறைவாக இருந்தாலும், இந்த எரிமலையின் அமைவிடமான ஈக்குவடாரில் பூமி உப்பலாகக் காணப்படுவதால் இது சாத்தியமானது.

சரி! இந்த மரியானா பள்ளம் எப்படி ஏற்பட்டது? சுருக்கமாக IBM என்றழைக்கப்படுகின்ற 'ஐஸு-போனின்-மரியானா (Izu-Bonin-Mariana)'  நிலத்தகடுகளினால் உண்டானது. பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு, பசிபிக் நிலத்தகடும் சிறிய மரியானா நிலத்தகடும் ஒன்றையொன்று மோதிக் கொண்டபோது, பசிபிக் நிலத்தகடானது மரியானாவின் அடியில் சென்றது. இதனால் இந்த மாபெரும் அகழி உருவானது. இது சுமாராக 180 மில்லியன் வருடங்கள் பழமையானது.
மரியானா அகழியின் தரையை தொட்ட சாதனையாளர்கள்
இங்கிலாந்துக் கடற்படையைச் சேர்ந்த சேலஞ்சர் என்ற கப்பல்தான் முதன்முதலில், இந்த இடத்தின் ஆழத்தை 26850 அடி என்று கண்டறிந்து, உலகுக்கு அறிவித்தது. 1875 ம் ஆண்டு ஒலி அதிர்வு முறையில் இதைக் கணித்துச் சொன்னார்கள். இந்தக் கப்பலை பெருமைப்படுத்தும் விதமாகவே, இந்த ஆழ்குழிக்கு 'சேலஞ்சர் படுகுழி' எனப் பெயரிடப்பட்டது. 1995-ம் ஆண்டு, கைகோ என்ற ஆள் இல்லாத நீர்மூழ்கியும் அதன் பின்னர் 2009 ம் ஆண்டு நெரயஸ் என்ற மற்றுமொரு ஆள் இல்லாத நீர்மூழ்கியும் இந்த ஆழத்தை தொட்டுவிட்டு வெற்றியுடன் திரும்பின.
உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டைக் கூட ஆயிரக்கணக்கானவர்கள் தொட்டு விட்டு திரும்பியிருக்கிறார்கள். ஆனால், இன்றைய நாள் வரை மரியானா அகழியின் தரை வரை சென்று திரும்பியவர்கள் மூன்றே பேர்தான். அதில் ஒருவர் உலகறிந்த, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான ஜேம்ஸ் கேமரோன். மற்ற இருவர், அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த டான் வால்ஷ் மற்றும் ஜேக்குஸ் பிக்கார்டு ஆவர்.
'அதெப்படி? அதிக ஆழம் செல்லும்போது நீர்மூழ்கி கூட வெடித்துச் சிதற வாய்ப்பிருக்கிறது என்றீர்களே... 'என்பவர்களுக்கு, அதிக ஆழத்தில் நீரின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய ஒரு கருவியை வடிவமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது கைகொடுத்தவர்தான் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜீன் பெலிக்ஸ் பிக்கார்டு. இவர் மேலே சொல்லப்பட்ட இருவரில் ஒருவரான ஜேக்குஸ் பிக்கார்டின் தந்தையாவார்.
இவர் பலூனில் பறந்து பல சாதனைகளை படைத்தவர். அவ்வாறு பலூனில் பறப்பதற்காக வடிவமைத்திருந்த கருவியில், நீர்க்குமிழியின் தத்துவத்தைப் பயன்படுத்தி, சிறிய மாற்றங்களைச் செய்து கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய ஒரு கருவியை வடிவமைத்தார். எடை குறைவாகக் காணும் இயல்புடைய திரவத்தை, ஒரு தொட்டியில் கேப்ஸ்யூல் வடிவிலான ஒரு இரும்பு உருளையின் மேல் அடைத்து, ஆழ்கடலுக்குள் செல்ல ஏதுவாக இரும்பு பட்டைகளையும், மேலே எழும்பி வருவதற்காக மின் மோட்டாரையும் இணைத்தார். ஆளில்லாமல் அனுப்பி பல முறை சோதனை செய்து வெற்றி கண்டார்.
இந்தக்கருவி, அதற்கு பிறகு பலரால் இன்னும் மேம்படுத்தப்பட்டது. முதன்முறையாக ஒரு மனிதனை ஏற்றிக்கொண்டு 13701 அடி ஆழம் வரைச் சென்று, சோதனையில் வெற்றியும் காணப்பட்டது. ஆனால், அதிக ஆழம் செல்வதற்கு இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியிருந்தது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு 1960-ம் ஆண்டு, தங்களது எட்டாவது முயற்சியில், மரியானா படுகுழிக்கு உள்ளே புகுந்தனர் ஜீன் பெலிக்ஸ் பிக்கார்டின் மகனான ஜேக்குஸ் பிக்கார்டும், அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த கேப்டன் டான் வால்ஷ் என்பவரும்.
அவர்கள் சென்ற நீர்முழ்கியின் பெயர் ட்ரெயிஸ்ட். அதில் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தன. வினாடிக்கு 0.914 நாட் என்ற வேகத்தில் அவர்கள் பயணித்தனர். வான்டன் எனும் அமெரிக்கப் போர்க்கப்பல், அவர்கள் பயணித்த பேத்திஸ்க்கோப் ட்ரெயிஸ்டியுடன் தொடர்பிலிருந்தது. அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவியின் மூலம் ஏழு வினாடிகள் கழித்துதான் தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

32500 அடிகள் இறங்கியிருந்தபோது, வெளிப்புறத்தில் ஏதோ சத்தம் கேட்டது. அதே நேரம் அவர்கள் இருந்த அறை குலுங்கியது. "நாம் தரையைத் தொட்டு விட்டோமோ?" என்றார் வால்ஷ்.  
"இல்லையே, ஆழம் காட்டும் கருவியில் அவ்வாறு காட்டப்படவில்லையே" என்றார் பிக்கார்ட்.
அவர்களின் கலம் மெதுவாக கீழிறங்கிக் கொண்டிருந்தது. கீழே தரை தென்படவில்லை.
ஒருவேளை ஏதேனும் பெரிய கடல்மிருகத்தை மோதி விட்டோமோ? இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அவர்களின் எதிரிலிருந்த கருவிகள் எல்லாம் எந்தவித தவறையும் காட்டவில்லை. உடனே பிராண வாயு உள் செலுத்தும் கருவி உள்பட, ஒலி எழுப்பக்கூடிய கருவிகள் அனைத்தையும் சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர். அந்த மயான அமைதியிலும், வெளிப்புறத்திலிருந்து எதுவோ உடைவது போன்ற ‘க்ரீச், க்ரீச்’ எனும் சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில், உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்து கீழே செல்வது, இல்லையெனில் திரும்ப சென்று விடுவது என்று இரண்டே வாய்ப்புகள் அவர்களிடத்திலிருந்தன. அவர்கள் தேர்ந்தெடுத்தது முதலாவது வாய்ப்பை. தொடர்ந்து பயணித்து அவர்கள் மரியானா அகழியின் ஆழத்தை (35,797 அடி) அடைந்தனர். கிட்டத்தட்ட ஐந்து மணி நேர பயணத்தில் ஆழத்தைத் தொட்டு விட்டனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான சாதனை செய்யப்பட்டு விட்டது.  
ஆனால் அவர்கள் உணர்ந்த அந்த சத்தம் மட்டும் என்னவென்று தெரியவில்லை. வெளியே பார்க்க உதவும் துளை வழியே எட்டிப் பார்த்தார் வால்ஷ். அவர்களுக்கும் வெளிப்புற நீரின் அழுத்தத்திற்கும் இடையே இரு கண்ணாடிகள் மட்டுமே உண்டு.
"அந்த சத்தம் எங்கிருந்து வந்தது தெரியுமா... கண்டுபிடித்து விட்டேன்." என்றார் புன்முறுவலுடன்.
வெளியே பார்க்க உதவும் கண்ணாடிகளில், வெளிப்புறக் கண்ணாடி விரிசல் விட்டிருந்திருக்கிறது. அந்த விரிசலின் ஒலியையே அவர்கள் கேட்டிருந்திருக்கிறார்கள். அந்த விரிசல் மட்டும் பெரிதாகி உடைந்து, உள்ளிருக்கும் கண்ணாடியும் உடைந்திருந்தால் இருவரும் உயிருடன் தப்பித்திருக்க முடியாது. சில சரித்திரச் சாதனைகள் படைக்கப்படும்போது, சோதனைகளும் தாமாக விலகி விடுகின்றன போலும்.

Wednesday 20 July 2016

உலகின் சிறந்த கல்வி முறை எந்த நாட்டுடையது தெரியுமா?




ந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆசிரியராவது என்பது கனவு. அது பெரிதும் கொண்டாடப்படும்  பணி மட்டுமல்ல, மிகுந்த மதிப்பு வாய்ந்த பதவியும்கூட. ஆசிரியர்களின் சராசரி மாத வருமானம் டாக்டர்கள், என்ஜினீயர்களுக்கு நிகரானது. அனுபவம், முதிர்ச்சி அடிப்படையில் அவர்களது வருமானமும் உயர்ந்து கொண்டே வரும்.


ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம். அந்த நாடு.. பின்லாந்து. இன்னும் சிலபல ஆச்சர்யங்கள் இருக்கின்றன,  தொடர்ந்து படியுங்கள்...

பின்லாந்தில் ஒரு குழந்தை பள்ளியில் சேரும் வயது என்ன தெரியுமா? ஏழு. ஆம் ஏழுவயதில்தான் கல்வி கற்கவே தொடங்குகிறார்கள். அதுவரை குழந்தைகள், குழந்தைகளாகவே இருக்கின்றனர். கல்வி ஓர் எளிமையான விளையாட்டு போல அவர்களுக்குள் புகுத்தப்படுகிறது.

முக்கியமாக நாம் பின்பற்றும் மனப்பாட முறை கல்வி கிடையாது. முதல் ஆறு வருடங்களுக்கு கற்கும் திறமையை அளவிடுதல் இல்லை, தேர்வு இல்லை. அதுவும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி அளவில் வீட்டுப்பாடம் என்பதுகூட அறவே கிடையாது.

இவ்வாறு ஒன்பது வருடங்கள் வரை பள்ளிப்படிப்பைத் தொடர்கின்றனர். பதினாறு வயதாகும்போதுதான் தேர்வு என்ற ஒன்றையே எதிர்கொள்கின்றனர். அதன் பின்னர் தனக்கான துறையை தேர்ந்தெடுத்து பயிலும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மாணவர்கள் அறிவானவர்கள் / திறமை குறைந்தவர்கள் என தகுதி பிரிக்கப்படுவதில்லை. அனைவருக்கும் ஒரே கல்வி முறை / கல்வியறைதான். கற்கும் திறன் குறைந்த மாணவர்களுக்கு அதை மேம்படுத்தும் விதத்தில் சற்று அதிக உதவிகள் மட்டும் செய்து தரப்படும்.

முதல் ஆறு வருடங்களுக்கு ஒரே ஆசிரியர். அந்தக் குழந்தைகளின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு, நெறிப்படுத்தி, கல்வியைப் புகுத்தி வழி நடத்துதல் அவரது கடமை! 

அதிகபட்சம் ஒரு நாளில் நான்கு வகுப்புகள் மட்டுமே நடைபெறும். அதிலும் வகுப்புகளுக்கிடையே ஒரு மணி நேரம் இடைவெளி விடப்படும். ஆசிரியர்கள் வகுப்பறைகளில் செலவிடும் நேரம் எவ்வளவு தெரியுமா? வெறும் நாலு மணி நேரம்தான்.

வகுப்பறையில் அதிகபட்சம் பதினாறு மாணவர்களே இருப்பர். வெறுமனே சொல்லித்தருதலை விட செயல்முறைக் கல்வியே அதிகம். எனவே, நிஜ உலகில் நாம் செய்யும் (!) சமைத்தல், சுத்தம் செய்தல் முதற்கொண்டு எல்லா அடிப்படை வேலைகளையும் கற்றுத் தெளிகின்றனர்.

படைப்பாற்றலுக்கே அதிக முக்கியத்துவம். கற்றுக்கொள்வதை தனித்திறமையுடன் மேம்படுத்த போதிய ஊக்குவிப்பு, ஆசிரியர்களால் வழங்கப்படும். மாணவர்களுக்குள் போட்டியை உண்டாக்காமல், குழுவாக இணைந்து வெற்றி காணும் வழிமுறைகளே போதிக்கப்படுகின்றன.

முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் சிறந்து விளங்கும் பத்து சதவிகிதத்தினரே ஆசிரியராக முடியும். ஆசிரியர்கள் தங்களது தகுதியை உயர்த்திக்கொண்டே இருத்தல் அவசியம். இதனால் அவர்களது தகுதி மேம்பாட்டுக்காக வாரத்தில் இரண்டு மணி நேரம் செலவிடுகிறார்கள்.

அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசால் நிதியுதவி செய்யப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகள், அரசினால் நிதியுதவி செய்யப்பட்டு அளிக்கப்படுகின்றன. மாணவர்களுக்கான உணவு, மருத்துவ வசதி போன்றவை முற்றிலும் அரசாலேயே அளிக்கப்படுகின்றன.

அரசின் பாடத்திட்டத்தில் வழிமுறைகள் மட்டுமே உண்டு. அதற்கான பயிற்சித் திட்டத்தை அந்தந்த ஆசிரியரே அவரது விருப்பப்படி வகுத்துக் கொள்ள வேண்டும். அவர் தம் மாணவர்களின் வளர்ச்சிக்கு அவர்களே பொறுப்பு. நம்பிக்கையே இந்த எளிமையான வழிமுறையை கட்டமைத்து வழிநடத்துகிறது!

யாருக்கும் யார் மீதும் சந்தேகம் இல்லை. இது நடக்குமா, ஒழுங்காக செய்கிறார்களா என சந்தேகக் கண் கொண்டு பார்க்காமல், அனைவரும் தன்னிச்சையாக வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.

மாணவன், தன் ஆசிரியர் தன்னை நல்ல முறையில் வழிநடத்துவார் என நம்புவது போல, மாணவன் முழு அர்ப்பணிப்போடு தன்னைத் தருவான் என ஆசிரியரும் நம்புகிறார். அதற்கேற்ற சூழ்நிலையும் சுதந்திரமும் அளிக்கப்படுகிறது. சமூகம், 'இந்த அரசு நல்ல கல்வியை தர அடிப்படை வசதிகளை செய்து தரும்' என நம்புகிறது.

இந்த நம்பிக்கை மிகச்சிறந்த முறையில் வேலை செய்கிறது.

மனனம் செய்து ஒப்புவிக்கும் மெக்காலே கல்விமுறையிலிருந்து நமது இந்தியா விடுதலை பெறும் நாள் எந்நாளோ..?!

ஐந்தாண்டு பயணம்... ஜூபிடரை ஆராயப்போகும் ஜூனோ... நகம் கடிக்கும் நாசா விஞ்ஞானிகள்!



“காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா” - இது ஜூபிடர் கிரகத்துக்கு மிகவும் பொருத்தமானது.ஆம்! மிகப்பெரிய வாயுப் பந்து அது. நமது சூரியக் குடும்பத்திலேயே மிகப்பெரியக் கோள். பெரியது என்றால் சுமாராக 1300 பூமிகளை அதனுள் அடக்கி விடலாம், அவ்வளவு பெரியது.  

எனில் நிலப்பரப்பு பெரியதாக இருக்குமே, இங்கு உயிர் வாழ்தல் பற்றி விஞ்ஞானிகள் இன்னும் ஏன் யோசிக்கவில்லை எனக் கேட்க வேண்டாம். முழுவதும் விஷ  வாயுக்களாலான கோள் இது.  விண்கலம் இறங்குவதற்கு இடமும் கிடையாது. காற்று வெளி முழுக்க 90 சதவிகிதம் ஹைட்ரஜன் மற்றும் 10 சதவிகிதம் ஹீலியம் நிறைந்துள்ளது. நமக்குத் தேவையான ஆக்சிஜன் கிடையாது. ஒரு வேளை விண்கலமொன்று ஜுபிடரின் உள்ளே நுழைந்தால், ஜூபிடரினுள் நிலவும் அழுத்தமானது அந்த விண்கலத்தினை ஒரு பேப்பர் கப்பை நசுக்குவதைப் போல நசுக்கி விடக்கூடும். இதன் அழுத்தமானது வாயுவை திரவமாக்கி விடும்.
தவிர இதன் காந்தப்புலமானது, பூமியினுடையதை விட 14 மடங்கு அதிகம். பூமியில் 50 கிலோ எடை உள்ள ஒருவர் ஜூபிடரில் 175 கிலோ எடையுடன் இருப்பார். ஜூபிடரின் மொத்த எடையானது பூமியின் எடையை விட 318 மடங்கு அதிகம். இன்னும் சொல்லப்போனால், நமது சூரியக்குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களின் எடையை விட, ஜூபிடரின் எடை இரண்டரை மடங்கு அதிகம்.
இதன் ஈர்ப்பு விசையானது மிக மிக மிக அதிகம். (மிக மிக தானே சரி என்பவர்களுக்கு; நானேதான் இன்னொரு மிக போட்டேன், ரொம்ப அதிகம்!)
இதனாலேயே இந்த பிரமாண்ட கிரகம், விண்வெளியின் மிகப்பெரிய தூசி உறிஞ்சி போல செயல்படுகிறது. நாம் வாழும் பூமியினை நோக்கி வரும் விண்கற்கள், எரிகற்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவற்றை தனது மிதமிஞ்சிய ஈர்ப்பு விசையால் கவர்ந்து தன்னுள்ளே இழுத்துக் கொண்டு விடுகிறது.

ஷுமேக்கர் வால் மீன் ஞாபகம் இருக்கிறதா? அது புவியின் மீது மோதும் அபாயத்திலிருந்து நம்மைக் காத்தது ஜூபிடர்தான். இந்த இடத்தில் ஒன்றை சொல்லியாக வேண்டும். புவியுலக விஞ்ஞானிகள்தான் சோதனைகளை  சாதனைகளாக்கிக் காட்ட வல்லவர்களாயிற்றே… இந்த அதிகபட்ச ஈர்ப்பு விசையினை கவண்கல் போல பயன்படுத்துகின்றார்கள். அதாவது, ஜூபிடரைத் தாண்டி வெகுதூரம் பயணிக்க வேண்டிய விண்கலத்தை ஜூபிடரை ஒரு முறை சுற்றி வரச்செய்து அதன் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி (கவண்கல் எறிவது போல) விண்வெளியில் எறியச் செய்து, அதிவேகமாக பயணிக்க வைக்கிறார்கள். வாயோஜர் விண்கலம் 1975-ல் இவ்வாறுதான் பயணித்தது.
ஜூபிடரில் காணப்படும் அழுத்தமானது அதன் வெளியினை திரவமாக மாற்றி விட்டிருக்கிறது. அதன் மையப்பகுதியில் திரவ ஹைட்ரஜன், ஆயிரம் கிலோமீட்டர் ஆழத்திற்கு கடல் போல நிரம்பியுள்ளது.

ஜூபிடரில் எந்நேரமும் புயல் வீசிக்கொண்டே இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 640 கிலோ மீட்டர். ஜூபிடரின் புயல்களில் குறிப்பிடத்தக்கது அனைவருக்கும் அறிமுகமான செம்புள்ளி என அழைக்கப்படும் புயலாகும். நமது சூரியக்குடும்பத்திலேயே மிகப்பெரிய புயல் என இதைச் சொல்லலாம். இந்தப் புயலானது ஏறத்தாழ முந்நூறு வருடங்கள் பழமையானது.

மேலும் அந்த செம்புள்ளியின் அளவானது மிக மிகப்பெரியது. இந்த செம்புள்ளியினுள் நமது பூமியைப் போன்று மூன்று பூமியை திணிக்க முடியும். சூரியக்குடும்பத்தில் முதலில் உருவானது ஜூபிடர்தான். மற்ற கோள்கள் உருவானதிலும் ஜூபிடரின் பங்கு உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
நாம் வாழும் பூமிக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு நிலாதான்.ஆனால் ஜூபிடருக்கு எத்தனை நிலவுகள் தெரியுமா? 63 நிலவுகள். (67 என்றும் கூறப்படுகிறது. உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில் 200 துணைக்கோள்கள். இதில் முக்காவாசி துணைக்கோள்களின் மொத்த அளவே 10 கிலோ மீட்டர்தான்) இதில் நான்கு நிலவுகள் அளவில் பெரியன. இந்த நான்கு நிலவுகளும் கலிலியோவினால் கண்டுபிடிக்கப்பட்டமையால் 'கலிலியன் நிலவுகள்' என அழைக்கிறார்கள். இவை சூரியக்குடும்பத்திலுள்ள ப்ளூட்டோ கிரகத்தை விட பெரியன.

நமது பூமியைச் சுற்றி வரும் துணைக்கோள்தான் நிலா (The Moon) அது போல் மற்ற கிரகங்களுக்கும் நிலவுகள் உண்டு. ஒவ்வொரு நிலவுக்கும் தனித்தனியே பெயர் உண்டு. எல்லா நிலாவையும் நிலா என்றே அழைக்க முடியாது இல்லையா... எனவே ஒவ்வொரு நிலவுக்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக இங்கு நான் குறிப்பிட்டுள்ள நான்கு பெரிய நிலவுகளின் பெயர்கள். சரி. நமது நிலவின் பெயர் என்ன?. 'The Moon' அதாவது moon with capital M! 
நாம் மறுபடியும் ஜுபிடருக்கு வருவோம். இவற்றுள் கனிமெட் எனும் நிலவின் விட்டம் 5262 கிலோமீட்டர்கள்.  ஜூபிடர் தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு, ஒன்பது மணி நேரம் மற்றும் 55 நிமிடங்கள்தான் ஆகும். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆனால் இதுதான் உண்மை. நமது பூமியை விட பல மடங்கு பெரியதான  ஒரு கிரகம், தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் பத்து மணி நேரம் மட்டுமே. அவ்வளவு வேகமாக ராட்சசன் மாதிரி தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது. மணிக்கு 45,300 கிலோ மீட்டர் வேகம். இதன் காரணமாக இந்த கிரகமே ஒரு பக்கம் அகலமாகவும் ஒரு பக்கம் குறுகலாகவும் நசுக்கப்படுகிறது. ஆனால் சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் அதிகம். ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 11 வருடங்களும் 314 நாட்களும் பிடிக்கும். 

இதனை நாம் வெறும் கண்ணால் பார்க்க இயலும். நமது துணைக்கோளான நிலா, வீனஸ் கிரகம் தவிர பார்க்க முடிகிற கோள் இதுவாகும். சனிக்கிரகத்திற்கு மட்டும் வளையங்கள் சொந்தமானது இல்லை. ஜூபிடருக்கும் மூன்று வளையங்கள் உண்டு. ஏன், யுரேனஸ் கிரகத்திற்கும் வளையங்கள் இருக்கின்றன. ஆனால் ஜூபிடரின் வளையங்கள் சனிக்  கிரகத்தின் வளையத்தைப் போல அழகானது கிடையாது. ஜூபிடரின் மையப்பகுதியானது, அடர்த்தியுடன் 50 ஆயிரம் டிகிரி வெப்ப நிலையில் கொதித்துக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.

ஜூபிடர் கிரகத்தை முதன்முதலில் நேருக்கு நேர் சந்தித்தது, நாசாவின் பயனியர் 10 விண்கலம் (1973). பின்னர், பயனியர் 11 (1974), வாயேஜர் 1, வாயேஜர் 2 (1979), யுலிசெஸ் (1992), கலிலியோ (1995), காசினி (2000) கடைசியாக நியூ ஹரிசன்ஸ் (2007) போன்ற விண்கலன்கள் தங்களின் நீண்ட பயணத்தின் போது சந்தித்தன. 

ஜூபிடரின் நிலவுகள் குறித்துச் சொல்ல வேண்டுமென்றால் இன்னொரு தனிக்கட்டுரைதான் எழுத வேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று, உயிர் வாழ ஏதுவான சூழ்நிலை அதன் நான்கு முக்கிய நிலவுகளில் ஒன்றான ஈரோப்பாவில் இருக்கிறது. ஈரோப்பா நிலவில், உறைந்த பகுதியின் அடியில் கடல் இருக்கலாமென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஐஓ நிலவில் ஏராளமான எரிமலைகள் இருக்கின்றன. இதில் இருக்கும் எரிமலைகள் அளவுக்கு நமது சூரியக்குடும்பத்தில் வேறெங்கும் கிடையாது.

பூமியிலிருந்து சுமார் 870 மில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கிறது ஜூபிடர். ஒரு பயணிகள் விமானம் மூலம் (மணிக்கு 950 கிலோ மீட்டர்கள் வேகம்) பயணித்தால், நாம் ஜூபிடரை சென்றடைய 342 வருடங்களாகும். அதுவே 2,65, 500 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணித்தால்? இதுவரை மேலே சொல்லப்பட்ட தகவல்கள் எல்லாம் இனிவரும் செய்திக்கான முன்னோட்டமே. அது என்ன தெரியுமா?
ஜூனோ!

மேலே சொல்லப்பட்ட வேகத்தில் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி, 2011 ம் வருடம் தன் பயணத்தைத் தொடங்கிய ஜூனோ, நேற்று ஜூபிடரின் சுற்றுப்பாதையை அடைந்திருக்கிறது. 

ஜூபிடர் தோன்றிய விதம், அதன் உள்ளே இருக்கும் தனிமங்கள், அதன் வளிமண்டலம், காந்த மண்டலம் குறித்து ஆராய்வதற்காக 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஏவப்பட்டது ஜூனோ. இவற்றை ஆராய்வதன் மூலம் இந்த சூரியக்குடும்பம் எவ்வாறு உருவானது என்பதை அறிய முடியும்.
ஜூனோவை ஜுபிடரின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்துவதுதான் இந்த பயணத்தின் மைல்கல். இதை நிகழ்த்திக்காட்டிய மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள். 

ஏனெனில் இதைச் செய்வதற்கு 35 நிமிடங்கள் அதன் முக்கிய இயந்திரத்தை இயக்கவேண்டும். அதுவும் சரியான தருணத்தில் ஆரம்பித்து சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். தவறு நேர்ந்தால் மொத்த பணமும் உழைப்பும் வீண். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் அளிக்கும் தகவல் விண்கலத்திற்கு சென்று சேர 48 நிமிடங்கள் பிடிக்கும். இந்த கால அளவினையும் கணக்கில் எடுத்துக்கொண்டு விண்கலத்தின் திசைவேகத்தை, ஒரு மணி நேரத்துக்கு 1212 மைல் என்ற அளவுக்கு குறைத்து, ஜூபிடரின் சுற்று வட்டப்பாதையில் நிறுத்த வேண்டும்.

திட்டமிட்டபடி (அமெரிக்காவின் சுதந்திர தினமான) ஜூலை 4-ம் தேதி, பசிபிக் நேரமான 8:53-க்கு ஜூனோ வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப்பட்ட தகவல் பெறப்பட்டது. 'பல கோடிக்கணக்கான மைல்கள் தொலைவிலிருந்து விண்கலத்தை இயக்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார் நாசா விஞ்ஞானி ரிக்.
அடுத்த சில மாதங்களுக்கு ஜூனோவின் பாகங்கள் ஒழுங்காக செயல்படுகின்றனவா என்ற சோதனைகள் நடைபெறும். ஜூனோவின் தகவல் திரட்டல்கள் அக்டோபரில்தான் தொடங்குகிறதாம். ஆனால் அதற்கு முன்பே தகவல்களை பெற முயற்சிப்பதாக நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூனோ, ஜூபிடரை 4300 மைல்கள் தொலைவிலிருந்து சுமார் 20 மாத காலங்களுக்கு, 37 தடவை சுற்றி வரும். அதன் பின்னர் சுற்று வட்டப்பாதையிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஜூபிடரின் வளிமண்டலத்தினால் எரிக்கப்பட்டு விடும்.
ஜூனோவின் பயணத்திற்கு எரிபொருளாக பயன்பட்டது அதில் பொருத்தப்பட்டிருந்த சூரியத்தகடு.  (காதைக்கொண்டு வாருங்கள்; ஜூனோவை விண்வெளிக்கு எடுத்துச் சென்ற ராக்கெட்டின் முக்கிய எரிபொருள் என்ன தெரியுமா? மண்ணெண்ணெயும் திரவ ஆக்சிஜனும்தான்) ஜூபிடரை ஆராய அனுப்பிய விண்கலத்தின் பெயர் ஜூனோ. இந்த ஜூனோ பெயர் சூட்டப்பட்டதின் பின்னணியிலும் ஒரு காரணம் உள்ளது, அது ஜூபிடரின் மனைவி பெயர் ஜூனோ!