Wednesday 20 July 2016

உலகின் சிறந்த கல்வி முறை எந்த நாட்டுடையது தெரியுமா?




ந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆசிரியராவது என்பது கனவு. அது பெரிதும் கொண்டாடப்படும்  பணி மட்டுமல்ல, மிகுந்த மதிப்பு வாய்ந்த பதவியும்கூட. ஆசிரியர்களின் சராசரி மாத வருமானம் டாக்டர்கள், என்ஜினீயர்களுக்கு நிகரானது. அனுபவம், முதிர்ச்சி அடிப்படையில் அவர்களது வருமானமும் உயர்ந்து கொண்டே வரும்.


ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம். அந்த நாடு.. பின்லாந்து. இன்னும் சிலபல ஆச்சர்யங்கள் இருக்கின்றன,  தொடர்ந்து படியுங்கள்...

பின்லாந்தில் ஒரு குழந்தை பள்ளியில் சேரும் வயது என்ன தெரியுமா? ஏழு. ஆம் ஏழுவயதில்தான் கல்வி கற்கவே தொடங்குகிறார்கள். அதுவரை குழந்தைகள், குழந்தைகளாகவே இருக்கின்றனர். கல்வி ஓர் எளிமையான விளையாட்டு போல அவர்களுக்குள் புகுத்தப்படுகிறது.

முக்கியமாக நாம் பின்பற்றும் மனப்பாட முறை கல்வி கிடையாது. முதல் ஆறு வருடங்களுக்கு கற்கும் திறமையை அளவிடுதல் இல்லை, தேர்வு இல்லை. அதுவும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி அளவில் வீட்டுப்பாடம் என்பதுகூட அறவே கிடையாது.

இவ்வாறு ஒன்பது வருடங்கள் வரை பள்ளிப்படிப்பைத் தொடர்கின்றனர். பதினாறு வயதாகும்போதுதான் தேர்வு என்ற ஒன்றையே எதிர்கொள்கின்றனர். அதன் பின்னர் தனக்கான துறையை தேர்ந்தெடுத்து பயிலும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மாணவர்கள் அறிவானவர்கள் / திறமை குறைந்தவர்கள் என தகுதி பிரிக்கப்படுவதில்லை. அனைவருக்கும் ஒரே கல்வி முறை / கல்வியறைதான். கற்கும் திறன் குறைந்த மாணவர்களுக்கு அதை மேம்படுத்தும் விதத்தில் சற்று அதிக உதவிகள் மட்டும் செய்து தரப்படும்.

முதல் ஆறு வருடங்களுக்கு ஒரே ஆசிரியர். அந்தக் குழந்தைகளின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு, நெறிப்படுத்தி, கல்வியைப் புகுத்தி வழி நடத்துதல் அவரது கடமை! 

அதிகபட்சம் ஒரு நாளில் நான்கு வகுப்புகள் மட்டுமே நடைபெறும். அதிலும் வகுப்புகளுக்கிடையே ஒரு மணி நேரம் இடைவெளி விடப்படும். ஆசிரியர்கள் வகுப்பறைகளில் செலவிடும் நேரம் எவ்வளவு தெரியுமா? வெறும் நாலு மணி நேரம்தான்.

வகுப்பறையில் அதிகபட்சம் பதினாறு மாணவர்களே இருப்பர். வெறுமனே சொல்லித்தருதலை விட செயல்முறைக் கல்வியே அதிகம். எனவே, நிஜ உலகில் நாம் செய்யும் (!) சமைத்தல், சுத்தம் செய்தல் முதற்கொண்டு எல்லா அடிப்படை வேலைகளையும் கற்றுத் தெளிகின்றனர்.

படைப்பாற்றலுக்கே அதிக முக்கியத்துவம். கற்றுக்கொள்வதை தனித்திறமையுடன் மேம்படுத்த போதிய ஊக்குவிப்பு, ஆசிரியர்களால் வழங்கப்படும். மாணவர்களுக்குள் போட்டியை உண்டாக்காமல், குழுவாக இணைந்து வெற்றி காணும் வழிமுறைகளே போதிக்கப்படுகின்றன.

முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் சிறந்து விளங்கும் பத்து சதவிகிதத்தினரே ஆசிரியராக முடியும். ஆசிரியர்கள் தங்களது தகுதியை உயர்த்திக்கொண்டே இருத்தல் அவசியம். இதனால் அவர்களது தகுதி மேம்பாட்டுக்காக வாரத்தில் இரண்டு மணி நேரம் செலவிடுகிறார்கள்.

அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசால் நிதியுதவி செய்யப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகள், அரசினால் நிதியுதவி செய்யப்பட்டு அளிக்கப்படுகின்றன. மாணவர்களுக்கான உணவு, மருத்துவ வசதி போன்றவை முற்றிலும் அரசாலேயே அளிக்கப்படுகின்றன.

அரசின் பாடத்திட்டத்தில் வழிமுறைகள் மட்டுமே உண்டு. அதற்கான பயிற்சித் திட்டத்தை அந்தந்த ஆசிரியரே அவரது விருப்பப்படி வகுத்துக் கொள்ள வேண்டும். அவர் தம் மாணவர்களின் வளர்ச்சிக்கு அவர்களே பொறுப்பு. நம்பிக்கையே இந்த எளிமையான வழிமுறையை கட்டமைத்து வழிநடத்துகிறது!

யாருக்கும் யார் மீதும் சந்தேகம் இல்லை. இது நடக்குமா, ஒழுங்காக செய்கிறார்களா என சந்தேகக் கண் கொண்டு பார்க்காமல், அனைவரும் தன்னிச்சையாக வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.

மாணவன், தன் ஆசிரியர் தன்னை நல்ல முறையில் வழிநடத்துவார் என நம்புவது போல, மாணவன் முழு அர்ப்பணிப்போடு தன்னைத் தருவான் என ஆசிரியரும் நம்புகிறார். அதற்கேற்ற சூழ்நிலையும் சுதந்திரமும் அளிக்கப்படுகிறது. சமூகம், 'இந்த அரசு நல்ல கல்வியை தர அடிப்படை வசதிகளை செய்து தரும்' என நம்புகிறது.

இந்த நம்பிக்கை மிகச்சிறந்த முறையில் வேலை செய்கிறது.

மனனம் செய்து ஒப்புவிக்கும் மெக்காலே கல்விமுறையிலிருந்து நமது இந்தியா விடுதலை பெறும் நாள் எந்நாளோ..?!

ஐந்தாண்டு பயணம்... ஜூபிடரை ஆராயப்போகும் ஜூனோ... நகம் கடிக்கும் நாசா விஞ்ஞானிகள்!



“காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா” - இது ஜூபிடர் கிரகத்துக்கு மிகவும் பொருத்தமானது.ஆம்! மிகப்பெரிய வாயுப் பந்து அது. நமது சூரியக் குடும்பத்திலேயே மிகப்பெரியக் கோள். பெரியது என்றால் சுமாராக 1300 பூமிகளை அதனுள் அடக்கி விடலாம், அவ்வளவு பெரியது.  

எனில் நிலப்பரப்பு பெரியதாக இருக்குமே, இங்கு உயிர் வாழ்தல் பற்றி விஞ்ஞானிகள் இன்னும் ஏன் யோசிக்கவில்லை எனக் கேட்க வேண்டாம். முழுவதும் விஷ  வாயுக்களாலான கோள் இது.  விண்கலம் இறங்குவதற்கு இடமும் கிடையாது. காற்று வெளி முழுக்க 90 சதவிகிதம் ஹைட்ரஜன் மற்றும் 10 சதவிகிதம் ஹீலியம் நிறைந்துள்ளது. நமக்குத் தேவையான ஆக்சிஜன் கிடையாது. ஒரு வேளை விண்கலமொன்று ஜுபிடரின் உள்ளே நுழைந்தால், ஜூபிடரினுள் நிலவும் அழுத்தமானது அந்த விண்கலத்தினை ஒரு பேப்பர் கப்பை நசுக்குவதைப் போல நசுக்கி விடக்கூடும். இதன் அழுத்தமானது வாயுவை திரவமாக்கி விடும்.
தவிர இதன் காந்தப்புலமானது, பூமியினுடையதை விட 14 மடங்கு அதிகம். பூமியில் 50 கிலோ எடை உள்ள ஒருவர் ஜூபிடரில் 175 கிலோ எடையுடன் இருப்பார். ஜூபிடரின் மொத்த எடையானது பூமியின் எடையை விட 318 மடங்கு அதிகம். இன்னும் சொல்லப்போனால், நமது சூரியக்குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களின் எடையை விட, ஜூபிடரின் எடை இரண்டரை மடங்கு அதிகம்.
இதன் ஈர்ப்பு விசையானது மிக மிக மிக அதிகம். (மிக மிக தானே சரி என்பவர்களுக்கு; நானேதான் இன்னொரு மிக போட்டேன், ரொம்ப அதிகம்!)
இதனாலேயே இந்த பிரமாண்ட கிரகம், விண்வெளியின் மிகப்பெரிய தூசி உறிஞ்சி போல செயல்படுகிறது. நாம் வாழும் பூமியினை நோக்கி வரும் விண்கற்கள், எரிகற்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவற்றை தனது மிதமிஞ்சிய ஈர்ப்பு விசையால் கவர்ந்து தன்னுள்ளே இழுத்துக் கொண்டு விடுகிறது.

ஷுமேக்கர் வால் மீன் ஞாபகம் இருக்கிறதா? அது புவியின் மீது மோதும் அபாயத்திலிருந்து நம்மைக் காத்தது ஜூபிடர்தான். இந்த இடத்தில் ஒன்றை சொல்லியாக வேண்டும். புவியுலக விஞ்ஞானிகள்தான் சோதனைகளை  சாதனைகளாக்கிக் காட்ட வல்லவர்களாயிற்றே… இந்த அதிகபட்ச ஈர்ப்பு விசையினை கவண்கல் போல பயன்படுத்துகின்றார்கள். அதாவது, ஜூபிடரைத் தாண்டி வெகுதூரம் பயணிக்க வேண்டிய விண்கலத்தை ஜூபிடரை ஒரு முறை சுற்றி வரச்செய்து அதன் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி (கவண்கல் எறிவது போல) விண்வெளியில் எறியச் செய்து, அதிவேகமாக பயணிக்க வைக்கிறார்கள். வாயோஜர் விண்கலம் 1975-ல் இவ்வாறுதான் பயணித்தது.
ஜூபிடரில் காணப்படும் அழுத்தமானது அதன் வெளியினை திரவமாக மாற்றி விட்டிருக்கிறது. அதன் மையப்பகுதியில் திரவ ஹைட்ரஜன், ஆயிரம் கிலோமீட்டர் ஆழத்திற்கு கடல் போல நிரம்பியுள்ளது.

ஜூபிடரில் எந்நேரமும் புயல் வீசிக்கொண்டே இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 640 கிலோ மீட்டர். ஜூபிடரின் புயல்களில் குறிப்பிடத்தக்கது அனைவருக்கும் அறிமுகமான செம்புள்ளி என அழைக்கப்படும் புயலாகும். நமது சூரியக்குடும்பத்திலேயே மிகப்பெரிய புயல் என இதைச் சொல்லலாம். இந்தப் புயலானது ஏறத்தாழ முந்நூறு வருடங்கள் பழமையானது.

மேலும் அந்த செம்புள்ளியின் அளவானது மிக மிகப்பெரியது. இந்த செம்புள்ளியினுள் நமது பூமியைப் போன்று மூன்று பூமியை திணிக்க முடியும். சூரியக்குடும்பத்தில் முதலில் உருவானது ஜூபிடர்தான். மற்ற கோள்கள் உருவானதிலும் ஜூபிடரின் பங்கு உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
நாம் வாழும் பூமிக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு நிலாதான்.ஆனால் ஜூபிடருக்கு எத்தனை நிலவுகள் தெரியுமா? 63 நிலவுகள். (67 என்றும் கூறப்படுகிறது. உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில் 200 துணைக்கோள்கள். இதில் முக்காவாசி துணைக்கோள்களின் மொத்த அளவே 10 கிலோ மீட்டர்தான்) இதில் நான்கு நிலவுகள் அளவில் பெரியன. இந்த நான்கு நிலவுகளும் கலிலியோவினால் கண்டுபிடிக்கப்பட்டமையால் 'கலிலியன் நிலவுகள்' என அழைக்கிறார்கள். இவை சூரியக்குடும்பத்திலுள்ள ப்ளூட்டோ கிரகத்தை விட பெரியன.

நமது பூமியைச் சுற்றி வரும் துணைக்கோள்தான் நிலா (The Moon) அது போல் மற்ற கிரகங்களுக்கும் நிலவுகள் உண்டு. ஒவ்வொரு நிலவுக்கும் தனித்தனியே பெயர் உண்டு. எல்லா நிலாவையும் நிலா என்றே அழைக்க முடியாது இல்லையா... எனவே ஒவ்வொரு நிலவுக்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக இங்கு நான் குறிப்பிட்டுள்ள நான்கு பெரிய நிலவுகளின் பெயர்கள். சரி. நமது நிலவின் பெயர் என்ன?. 'The Moon' அதாவது moon with capital M! 
நாம் மறுபடியும் ஜுபிடருக்கு வருவோம். இவற்றுள் கனிமெட் எனும் நிலவின் விட்டம் 5262 கிலோமீட்டர்கள்.  ஜூபிடர் தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு, ஒன்பது மணி நேரம் மற்றும் 55 நிமிடங்கள்தான் ஆகும். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆனால் இதுதான் உண்மை. நமது பூமியை விட பல மடங்கு பெரியதான  ஒரு கிரகம், தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் பத்து மணி நேரம் மட்டுமே. அவ்வளவு வேகமாக ராட்சசன் மாதிரி தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது. மணிக்கு 45,300 கிலோ மீட்டர் வேகம். இதன் காரணமாக இந்த கிரகமே ஒரு பக்கம் அகலமாகவும் ஒரு பக்கம் குறுகலாகவும் நசுக்கப்படுகிறது. ஆனால் சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் அதிகம். ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 11 வருடங்களும் 314 நாட்களும் பிடிக்கும். 

இதனை நாம் வெறும் கண்ணால் பார்க்க இயலும். நமது துணைக்கோளான நிலா, வீனஸ் கிரகம் தவிர பார்க்க முடிகிற கோள் இதுவாகும். சனிக்கிரகத்திற்கு மட்டும் வளையங்கள் சொந்தமானது இல்லை. ஜூபிடருக்கும் மூன்று வளையங்கள் உண்டு. ஏன், யுரேனஸ் கிரகத்திற்கும் வளையங்கள் இருக்கின்றன. ஆனால் ஜூபிடரின் வளையங்கள் சனிக்  கிரகத்தின் வளையத்தைப் போல அழகானது கிடையாது. ஜூபிடரின் மையப்பகுதியானது, அடர்த்தியுடன் 50 ஆயிரம் டிகிரி வெப்ப நிலையில் கொதித்துக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.

ஜூபிடர் கிரகத்தை முதன்முதலில் நேருக்கு நேர் சந்தித்தது, நாசாவின் பயனியர் 10 விண்கலம் (1973). பின்னர், பயனியர் 11 (1974), வாயேஜர் 1, வாயேஜர் 2 (1979), யுலிசெஸ் (1992), கலிலியோ (1995), காசினி (2000) கடைசியாக நியூ ஹரிசன்ஸ் (2007) போன்ற விண்கலன்கள் தங்களின் நீண்ட பயணத்தின் போது சந்தித்தன. 

ஜூபிடரின் நிலவுகள் குறித்துச் சொல்ல வேண்டுமென்றால் இன்னொரு தனிக்கட்டுரைதான் எழுத வேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று, உயிர் வாழ ஏதுவான சூழ்நிலை அதன் நான்கு முக்கிய நிலவுகளில் ஒன்றான ஈரோப்பாவில் இருக்கிறது. ஈரோப்பா நிலவில், உறைந்த பகுதியின் அடியில் கடல் இருக்கலாமென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஐஓ நிலவில் ஏராளமான எரிமலைகள் இருக்கின்றன. இதில் இருக்கும் எரிமலைகள் அளவுக்கு நமது சூரியக்குடும்பத்தில் வேறெங்கும் கிடையாது.

பூமியிலிருந்து சுமார் 870 மில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கிறது ஜூபிடர். ஒரு பயணிகள் விமானம் மூலம் (மணிக்கு 950 கிலோ மீட்டர்கள் வேகம்) பயணித்தால், நாம் ஜூபிடரை சென்றடைய 342 வருடங்களாகும். அதுவே 2,65, 500 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணித்தால்? இதுவரை மேலே சொல்லப்பட்ட தகவல்கள் எல்லாம் இனிவரும் செய்திக்கான முன்னோட்டமே. அது என்ன தெரியுமா?
ஜூனோ!

மேலே சொல்லப்பட்ட வேகத்தில் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி, 2011 ம் வருடம் தன் பயணத்தைத் தொடங்கிய ஜூனோ, நேற்று ஜூபிடரின் சுற்றுப்பாதையை அடைந்திருக்கிறது. 

ஜூபிடர் தோன்றிய விதம், அதன் உள்ளே இருக்கும் தனிமங்கள், அதன் வளிமண்டலம், காந்த மண்டலம் குறித்து ஆராய்வதற்காக 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஏவப்பட்டது ஜூனோ. இவற்றை ஆராய்வதன் மூலம் இந்த சூரியக்குடும்பம் எவ்வாறு உருவானது என்பதை அறிய முடியும்.
ஜூனோவை ஜுபிடரின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்துவதுதான் இந்த பயணத்தின் மைல்கல். இதை நிகழ்த்திக்காட்டிய மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள். 

ஏனெனில் இதைச் செய்வதற்கு 35 நிமிடங்கள் அதன் முக்கிய இயந்திரத்தை இயக்கவேண்டும். அதுவும் சரியான தருணத்தில் ஆரம்பித்து சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். தவறு நேர்ந்தால் மொத்த பணமும் உழைப்பும் வீண். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் அளிக்கும் தகவல் விண்கலத்திற்கு சென்று சேர 48 நிமிடங்கள் பிடிக்கும். இந்த கால அளவினையும் கணக்கில் எடுத்துக்கொண்டு விண்கலத்தின் திசைவேகத்தை, ஒரு மணி நேரத்துக்கு 1212 மைல் என்ற அளவுக்கு குறைத்து, ஜூபிடரின் சுற்று வட்டப்பாதையில் நிறுத்த வேண்டும்.

திட்டமிட்டபடி (அமெரிக்காவின் சுதந்திர தினமான) ஜூலை 4-ம் தேதி, பசிபிக் நேரமான 8:53-க்கு ஜூனோ வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப்பட்ட தகவல் பெறப்பட்டது. 'பல கோடிக்கணக்கான மைல்கள் தொலைவிலிருந்து விண்கலத்தை இயக்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார் நாசா விஞ்ஞானி ரிக்.
அடுத்த சில மாதங்களுக்கு ஜூனோவின் பாகங்கள் ஒழுங்காக செயல்படுகின்றனவா என்ற சோதனைகள் நடைபெறும். ஜூனோவின் தகவல் திரட்டல்கள் அக்டோபரில்தான் தொடங்குகிறதாம். ஆனால் அதற்கு முன்பே தகவல்களை பெற முயற்சிப்பதாக நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூனோ, ஜூபிடரை 4300 மைல்கள் தொலைவிலிருந்து சுமார் 20 மாத காலங்களுக்கு, 37 தடவை சுற்றி வரும். அதன் பின்னர் சுற்று வட்டப்பாதையிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஜூபிடரின் வளிமண்டலத்தினால் எரிக்கப்பட்டு விடும்.
ஜூனோவின் பயணத்திற்கு எரிபொருளாக பயன்பட்டது அதில் பொருத்தப்பட்டிருந்த சூரியத்தகடு.  (காதைக்கொண்டு வாருங்கள்; ஜூனோவை விண்வெளிக்கு எடுத்துச் சென்ற ராக்கெட்டின் முக்கிய எரிபொருள் என்ன தெரியுமா? மண்ணெண்ணெயும் திரவ ஆக்சிஜனும்தான்) ஜூபிடரை ஆராய அனுப்பிய விண்கலத்தின் பெயர் ஜூனோ. இந்த ஜூனோ பெயர் சூட்டப்பட்டதின் பின்னணியிலும் ஒரு காரணம் உள்ளது, அது ஜூபிடரின் மனைவி பெயர் ஜூனோ!