Monday 31 May 2021

ஒரு சரித்திர நிகழ்வு!

 பல நூறு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியும் செவ்வாயும் தற்போதைய நிலையை விட ஒன்று போலிருந்தன. இரண்டு கிரகங்களிலும் நீர் இருந்தது. நிலப்பரப்பும் இருந்தது. சூரியனின் சக்திமிக்க கதிர்வீச்சிலிருந்து மேற்பரப்பைப் பாதுகாக்க காந்தப்புலங்களும் இருந்தன. ஆனால் பூமியில் மட்டும் உயிரினங்கள் உண்டாகிப் பல்கிப்பெருகின. செவ்வாயில் அது ஏன் நடக்கவில்லை? அல்லது ஒருவேளை நடந்திருக்குமோ??


இந்தக் கேள்விக்கு விடை தேடி மனித இனம் வளர்ச்சியுற்ற பின்னர் செவ்வாயைச் சுற்றி வந்து ஆராயவும், அங்கு இறங்கி சோதனைகள் செய்யவும் ராக்கெட்டுகளை அனுப்பியது. மனித இனத்தின் அடுத்தப் பாய்ச்சலாக செவ்வாயில் குடியேற்றம் செய்யவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் நம் பூமியின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் ராக்கெட்டுகளை சோதனை செய்துகொண்டிருக்கிறார். இந்த மாதத்திற்குள் அவர்களது அடுத்த சோதனை ராக்கெட்டான SN10 பயணிக்க இருக்கின்றது.

செவ்வாயின் சுற்று வட்டப்பாதையில் செயற்கைக் கோளை நிலைநிறுத்துவதும் அங்கு தரையிறங்குவதும் கடினமான ஒன்று. பல நாடுகளின் இம்முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இது வரை ஐந்து நாடுகள் மட்டுமே இதில் வெற்றி கண்டுள்ளன. (அதில் நம் இந்தியாவும் ஒன்று 2013 நவம்பரில் ஏவப்பட்டு செப்டம்பர் 2014-ல் செவ்வாயின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட மங்கல்யான் அதன் முதன்மைப் பணியை முடித்து விட்டாலும் இன்றும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது). செவ்வாயில் தரையிறங்குதலுக்கு பல்வேறு சிக்கல்கள் காரணிகளாக இருப்பதால் தான் அது மிகவும் கடினமானதாகக் கருதப்படுகிறது. அதில் முதன்மையான காரணமானது தொலைத் தொடர்பு.

”எஞ்சின் இயக்கத்தை நிறுத்தவும்” என்று ரேடியோ சிக்னல் மூலம் நாம் அனுப்பினால் 11 நிமிடங்கள் கழித்தே அது நம் விண்கலத்தைச் சென்று சேரும். ”மெயின் எஞ்சினையா?” என்று விண்கலம் பதில் கேள்வி வினவினால் அது வந்து சேர அடுத்த 11 நிமிடங்களாகும். ஆக மொத்தம் 22 நிமிடங்கள். அதற்குள் எல்லாம் முடிந்து விட்டிருக்கும்! எனவே அனுப்பப்படும் விண்கலம் தன்னிச்சையாகவே எல்லாம் செய்தாக வேண்டும். இதனாலேயே செவ்வாயில் தரையிறங்கும் முயற்சிகளில் இதுவரை 40% மட்டுமே வெற்றி கிட்டியிருக்கிறது.

தற்போது Perseverance [விடாமுயற்சி – காரணப்பெயர்(!) ] என்ற பெயரிடப்பட்ட நாசாவின் ரோவர் ஒன்று அந்த முயற்சியில் வெற்றி காண களமிறங்கியிருக்கிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட அது தொடர்ந்து ஆறரை மாதங்கள் பயணித்து எதிர்வரும் பிப்ரவரி 18-ம் தேதி செவ்வாயில் தரையிறங்க இருக்கிறது. அந்த நிகழ்வை நாசா நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கின்றார்கள். அதில் அப்படியென்ன முக்கியத்துவம்?





கடந்த 2019-ம் வருடம் செவ்வாய்க்கு உங்கள் பெயரை அனுப்புங்கள் என்ற ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது நாசா. இதன் மூலம் 11 மில்லியன் பேர் தங்கள் பெயரைப் பதிவு செய்திருந்தார்கள். (அதில் நானும் ஒருவன் 😉 ) அந்தப் பெயர்களை எல்லாம் மூன்று சிலிக்கான் சிப்புகளில் ஏற்றி ரோவரில் பதித்து வைத்திருக்கிறார்கள். இது தவிர இந்த பேண்டமிக் யுகத்தில் சிறப்பாக களப்பணியாற்றிய மருத்துவப் பணியாளர்களைச் சிறப்பிக்கும் விதத்தில் அவர்களுக்கும் இடமளித்திருக்கிறார்கள்.

செவ்வாயில் தரையிறங்கும் நிகழ்வானது மூன்று பகுதிகளாக நிகழ்கிறது. செவ்வாயின் வளிமண்டலத்தில் நுழைதல், கீழே இறங்குதல் பின்னர் தரையைத் தொடுதல். சுருக்கமாக (EDL) என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு மணிக்கு 20 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் நுழைந்து அடுத்த ஏழு நிமிடங்களில் தரையிறங்கி விடுதலோடு முடிந்து விடும். இந்த 7 நிமிட திக் திக் நிகழ்வைத் தான் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய நேரப்படி 18-ம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் துவங்கும்.

Perseverance தரையிறங்கத் திட்டமிட்டிருக்கும் இடம் Jezero crater எனும் 45 கிலோ மீட்டர் அகலமுள்ள பள்ளம். இது பாறைகள், மணல் குன்றுகள், செங்குத்தான மலைகள் நிறைந்த தரையிறங்க இன்னும் கடினமான பகுதி. ஏற்கனவே செவ்வாயில் தரையிறங்குதல் கடினம். இந்த ஜெசிரோ பள்ளம் அதை இன்னும் கடினமாக்குமென்றால் அப்படிப்பட்ட இடத்தை விஞ்ஞானிகள் ஏன் தேர்ந்தெடுத்தனர்? காரணம் இருக்கிறது.

3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஆறு பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. அதன் கழிமுகப்பகுதியாக இருக்கும் இந்தப்பள்ளத்தில் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்க வாய்ப்பு அதிகம். Jezero என்றால் ஏரி என்று பொருள். இங்கு கார்பன் கனிமங்கள் இருப்பதாக முந்தைய ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கின்றது.

இதற்கு முந்தைய ரோவர்கள் எளிதில் இறங்கக்கூடிய சமதளப்பகுதிகளில் தரையிறங்கி பின்னர் ஆராய்ச்சி மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை நோக்கிப் பயணித்தன. இதற்கு நிறைய நாட்கள் வீணானது. இம்முறை கடினமான இடமாக இருந்தாலும் தரையிறங்க உதவும் வகையில் இரண்டு புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த இருக்கிறார்கள்.

அவை என்ன தொழில்நுட்பங்கள்?


தரையிறங்கும் சமயத்திலேயே இரண்டு புதிய தொழில்நுட்பங்கள் பரிசோதிக்கப்பட இருக்கின்றன. இறங்கும் நிலப்பரப்புக்கேற்றவாரு லேண்டரை வழிநடத்தி, தேவைப்பட்டால் கடைசி வினாடியில் இறங்குமிடத்தை மாற்றி இறக்கக்கூடிய வல்லமை படைத்த தொழில்நுட்பமும் துல்லியமான நேரத்தில் லேண்டரின் பாராசூட்டை விரிக்க உதவும் Range Trigger எனும் தொழில்நுட்பமும்.

செவ்வாயின் வளிமண்டலத்தில் நுழைவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு செவ்வாய் வரை பயணிக்க உதவிய எரிபொருள் தொட்டிகள், சூரியத்தகடுகள் முதலியவற்றை கழற்றி விடப்படுகின்றன. இதன்பின் அதன் த்ரஸ்டர்கள் மூலம் விண்கலத்தின் வெப்பக்கவசம் கீழ்நோக்கியிருக்குமாறு திருப்பி விடப்படும். ஏனெனில் விண்கலம் செவ்வாயின் வளிமண்டலத்தில் நுழையும்போது 2400 டிகிரி வெப்பம் உருவாகும். வெப்பக்கவசம் அதைத் தாங்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர ரோவரானது ஏரோஷெல் எனும் மற்றுமொரு சிறப்புக் கவசத்தில் பாதுகாக்கப்பட்டிருப்பதால் அங்கு ஒரு அறை வெப்பமே நிலவும்.

விமானங்களில் பயணிக்கும்போது காற்றுப் பைகள் பற்றி உணர்ந்திருப்போம். செவ்வாயின் வளிமண்டலத்திலும் அத்தகையக் காற்றுப் பைகள் உண்டு. அவை விண்கலத்தைத் திசை திருப்ப நேரிட்டாலும் த்ரஸ்டர்கள் அதன் இலக்கை நோக்கிய பாதையில் தொடர்ந்து செல்ல உதவி செய்யும். வெப்பக்கவசம் விண்கலத்தின் வேகத்தை மணிக்கு 1600 கிலோ மீட்டராக குறைக்கிறது. இது பாராசூட் விரிக்கப்பட வேண்டிய நேரம்.

சுமாராக 11 கிலோமீட்டர் உயரத்தையும் குறிப்பிட்ட வேகத்தையும் அடையும் போது பாராசூட் விரிக்கப்படும். Perseverance தனது சூப்பர்சோனிக் பாராசூட்டை விரிக்க வேண்டிய நேரத்தை Range Trigger எனும் புதிய தொழில்நுட்பம் மூலம் செய்ய இருக்கிறது. இது இறங்க வேண்டிய இலக்கிற்கும் இருக்கும் உயரத்திற்கும் தொலைவைக் கணக்கிட்டு சரியான நேரத்தில் சூப்பர்சோனிக் பாராசூட் விரிவதை உறுதி செய்யும். இந்த Range Trigger போல மேலும் சில புதிய தொழில்நுட்பங்களை பரிசோதிக்க இருக்கிறார்கள். Perseverance சேகரித்து வைக்கும் பாறை மாதிரிகளை பூமிக்குத் திரும்ப கொண்டு வர உதவும் அடுத்தடுத்த முயற்சிகளுக்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவியாக இருக்கும்.

பாராசூட் விரிக்கப்பட்ட 20 வினாடிகளுக்கு பிறகு வெப்பக்கவசமும் பிரித்து விடுவிக்கப்படுகிறது. இப்போது உள்ளிருக்கும் ஒரு சக்தி வாய்ந்த கேமரா கீழே தெரியும் தரைப்பகுதியை படமெடுத்து ரேடாரிடம் அளிக்கும். நிலப்பரப்புக்கேற்ப வழிநடத்தும் அமைப்பு தற்போது பொறுப்பேற்றுக் கொள்கிறது. இதுவும் ஒரு புதிய தொழில்நுட்பமாகும். அது தன்னிடமுள்ள (முந்தைய லேண்டர்கள் மூலம் பெறப்பட்ட) நிலப்பரப்புகளின் மாதிரிகளை வைத்து இறங்க வேண்டிய இடத்தைத் தீர்மானிக்கிறது. தனக்குக் கீழே இருக்கும் நிலப்பரப்பு பாறைகளோ, குன்றுகளோ நிறைந்தது எனில் அது அருகிலிருக்கும் நிலப்பரப்புகளை ஆராய்ந்து தேவைப்பட்டால் லேண்டரை கிட்டத்தட்ட 600 மீட்டர்கள் அளவுக்குத் தள்ளி இறங்கச் செய்யும் செயல்முறைகளைக் கொண்டிருக்கும். இது அத்தனையும் பத்தே விநாடிகளில் நடந்து முடிய வேண்டும். நாசா விஞ்ஞானிகள் நகங்கள் பறிபோகக் காத்திருக்கின்றன.

திக் திக் நிமிடங்கள் இத்துடன் முடியவில்லை. இப்போது ஸ்கைக்ரேனின் வேலை தொடங்குகிறது. அதென்ன ஸ்கை கிரேன்?



லேண்டர் பாராசூட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் அதே சமயம் கேமராக்கள் தொடர்ந்து இயங்கி நிலப்பரப்பை புகைப்படங்கள் எடுத்து சரிபார்த்து துல்லியமாக இறங்க வேண்டிய இடத்தைத் தீர்மானிக்கின்றன. விடுவிக்கப்பட்ட பாராசூட் தன்மேல் விழுவதைத் தவிர்க்க த்ரஸ்டர்கள் மூலம் தன்னைச் சற்று நகர்த்திக் கொள்ளும். என்ன ஒரு புத்திசாலித்தனம்(!) கிட்டத்தட்ட 2100 மீட்டர்கள் உயரத்திலிருக்கும்போது ஸ்கைகிரேனுடன் இணைக்கப்பட்டுள்ள எட்டு ராக்கெட்டுகள் ஒரு ஜெட்பேக்கைப் போல செயல்பட்டு கீழிறங்கத் துவங்கும்.

தரையைத் தொட சரியாக 12 வினாடிகள் இருக்கும்போது ரோவரை 6 மீட்டர் நீளமுள்ள நைலான் கயிறுகளின் மூலம் கீழே இறக்குகிறது ஸ்கை கிரேன். இப்போது ரோவர் ஒரு விமானம் தரையிறங்க அதன் சக்கரத்தை வெளியாக்கித் தயாராவதைப் போல கீழிறங்கும். ரோவரின் சக்கரங்கள் தரையைத் தொட்டவுடன் ஸ்கைகிரேனின் நைலான் கயிறுகள் கண்ணிமைக்கும் நேரத்தில் நெருப்புப் பொறி போல வெட்டப்பட்டு விடும். இப்போது ஸ்கைகிரேன் அது தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியோடு ராக்கெட்டுகளின் உதவியோடு ரோவரிடமிருந்து சற்றே பாதுகாப்பான தூரத்தை அடைந்து தன் உயிரை விடும்(!).

Perseverance இது வரை செவ்வாயில் தரையிறங்கிய மற்ற ரோவர்களை விட அதிக தூரம் பயணிக்க இருக்கிறது. இதுவரை செவ்வாயில் ஒருநாளில் Opportunity (ஆப்பர்சூனிட்டி) ரோவர் பயணித்த தூரமான 214 மீட்டர்கள் தான் ஒரு ரோவர் பயணித்த அதிகபட்சத் தொலைவு. ஆனால் Perseverance தினமுமே 200 மீட்டர்கள் பயணிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செவ்வாயின் ஒரு நாளென்பது பூமியின் ஒரு நாளை விட 40 நிமிடங்களே அதிகம்.

Perseverance ரோவர் நாசா இது வரை அனுப்பியதில் ஐந்தாவது ரோவராகும். இது ஒரு டன் எடையுடன் பத்து அடிகள் நீளமும் 9 அடிகள் அகலமும் கொண்டது. இதில் மொத்தம் ஆறு சக்கரங்கள் இருக்கும்.

ரோவரின் மூளையாக செயல்பட இரண்டு கணினிகள் இதில் இருந்தாலும் ஒரு
நேரத்தில் ஒன்று மட்டுமே இயங்கும். இவை தவிர புகைப்படங்களை ஆராய்ந்து அதனுடனிருக்கும் வரைபடத்துடன் ஒப்பிடும் பணியை மூன்றாவதாக ஒரு கணினி செய்யும். இதில் மொத்தம் 23 கேமராக்கள் உள்ளன. தரையிறங்கும் பணிக்காக ஏழு கேமராக்களும் அறிவியல் ஆராய்ச்சிக்காக ஏழு கேமராக்களும் பொறியியல் பணிக்காக ஒன்பது கேமராக்களும் உதவும். மேலும் ஒலியைப் பதிவு செய்வதற்காக இரண்டு மைக்ரோபோன்களும் உள்ளன.

ரோவர் தரையிறங்கியவுடன் அதனால் விளைந்த தூசுகள் அடங்கியவுடன் புகைப்படம் எடுத்து அனுப்புவது தான் அதன் முதல் வேலை. ஆனால் இந்தப்படங்கள் சுமாரான தரத்துடன் தான் இருக்கும். ஏனெனில் Hazcam எனப்படும் இரு கேமராக்களின் லென்ஸ்கள் தூசி படாவண்ணம் கவர் செய்யப்பட்டிருக்கும். அப்படியே எடுக்கப்படும் புகைப்படங்கள் தான் முதலில் கிடைக்கும். அன்றைய தினமே சிறிது நேரம் கழித்து அதிகத் தெளிவான புகைப்படங்கள் எடுத்து அனுப்பப்படும்.

எல்லாம் சரி, செவ்வாயில் தங்கி வேலை செய்யும் இந்த ரோவருக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கும்? ஒரு வேளை சூரிய மின்சாரம் கிடைக்காவிடில் மாற்று எரிபொருள் என்ன? இன்னுமொரு ஆச்சர்யம் காத்திருக்கிறது. அது என்ன?




அந்த இன்னுமொரு ஆச்சர்யம் ஹெலிகாப்டர். ஆம். பூமியைத் தவிர வேறொரு கிரகத்தில் ஒரு ஹெலிகாப்டர் பறக்க இருக்கிறது. அதுவும் செவ்வாயின் மெல்லிய வளிமண்டலத்தில் ஒரு ஹெலிகாப்டர் தன்னிச்சையாக தானே மேலெழுந்து பறந்து திரிந்து புகைப்படங்கள் எடுத்து அனுப்ப இருக்கிறது.

தரையிறங்கியதிலிருந்து 30 நாட்கள் கழித்து Ingenuity எனும் ஹெலிகாப்டர் விடுவிக்கப்படும். அதுவும் ரோவர் இறங்கிய இடத்திலிருந்து நகர்ந்து நகர்ந்து சமதளமான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து (ஹெலிபேடாம்!) Ingenuity எனும் இரு கேமராக்கள் கொண்ட அந்த ஹெலிகாப்டரை பறக்க அனுப்பும். 2 கிலோ எடையுள்ள இந்த ஹெலிகாப்டர் செவ்வாயின் மெல்லிய வளிமண்டலத்தில் பறந்து ஆராய்ந்து தகவல்களை ரோவருடன் பரிமாறிக் கொள்ளும். இத்தகவகல்களை ரோவர் பூமிக்கு அனுப்பும்.

இந்த ரோவர் வேலை செய்ய மின்சாரம் தேவையாயிற்றே! சூரிய மின்சாரத்தை நம்பிக்கொண்டிருந்தால் குளிர் காலத்தில் என்னாவது? அதற்கு MMRTG எனப்படும் அணு மின்கலம் உதவுகிறது. இந்த மின்கலத்தால் உருவாகும் வெப்பம் கூட வீணடிக்கப்படாமல் திரவவடிவில் சேமிக்கப்பட்டு செவ்வாயின் இரவு நேர கடும் குளிரிலிருந்து மின்னணு சாதனங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும். இந்த ரோவரின் முதன்மை நோக்கமானது முன்பு செவ்வாயில் நுண்ணுயிர்கள் இருந்தனவா என்பதை ஆராய்வதே.

இதனாலேயே பனிக்கட்டியாகவே திரவ வடிவிலோ நீர் இருக்கும் பகுதிகளை விட்டு Jezero பள்ளத்தைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Perseverance ரோவரில் இன்னுமொரு அதிசயமான புதிய தொழில்நுட்பம் மோக்சி (MOXIE). செவ்வாயின் காற்றில் காணப்படும் கார்பன் டை ஆக்சைடிலிருந்து ஆக்சிஜனை உருவாக்க முடியுமா என்று இதிலிருக்கும் MOXIE எனும் கருவி ஆராயும். இதன்மூலம் எதிர்காலத்தில் செவ்வாயிலிருந்து ராக்கெட் பூமிக்குத் திரும்ப திரவ ஆக்சிஜன் அங்கேயே நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும். தவிர மனிதர்கள் சுவாசிக்க ஆக்சிஜனையும் உற்பத்தி செய்ய முடியும்.

தன்னைச் சுற்றி இருக்கும் பொருட்களிலிருந்தே தேவையானவற்றை உற்பத்தி செய்து கொண்டால் செலவும் மிச்சமாகும் தானே?

செவ்வாயின் காலநிலை, புவியியல், எதிர்காலத்தில் மனிதர்கள் மூலம் ஆய்வு செய்தல் போன்றவை தான் இந்த ரோவரின் பணிகள். இதன் இயந்திரக்கையில் இருக்கும் PIXL எனும் எக்ஸ்ரே கருவி ஒரு மணற்துகளை பத்தே வினாடிகளில் ஆராயும் திறமை பெற்றது. மற்றொரு கருவியான SHERLOC செவ்வாயில் இருக்கும் கரிம மூலக்கூறுகளைப் பற்றி ஆராய்ந்து பூமிக்குத் தகவல்களை அனுப்பும். ஷெர்லாக் பெயர்க்காரணம் தெரிகிறதா?

SUPERCAM எனும் கேமரா லேசர் மூலம் 7 மீட்டர் தொலைவிலிருந்தே ஆராய முடியும். மேலும் தனது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எதை ஆராயலாம் என்றும் அதுவே முடிவு செய்யும். செவ்வாயின் பாறைகளில் சிறு துளையிட்டு ஒரு சாக்பீஸ் துண்டு அளவுக்கு வெட்டியெடுத்து சேகரித்து வைத்துக் கொள்ளும். அந்தக் கற்கள் பின்னர் நாசாவும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் இணைந்து செயல்படுத்த இருக்கும் மாதிரிக் கற்களை திரும்ப பூமிக்குக் கொண்டு வரும் திட்டத்தின் படி கொண்டு வரப்படும்.

இந்தத் திட்டத்திற்காக நாசா செலவிட்டிருக்கும் தொகை 2.5 பில்லியன் டாலர்கள். Perseverance செவ்வாயில் நீண்டகாலம் தன் வாழ்நாளை செலவிட இருக்கிறது. அது தரையிறங்கும் அந்த திக் திக் நிமிடங்களைத் தான் நாம் நேரடி ஒளிபரப்பாக காண இருக்கிறோம். நாசாவின் அனைத்து சோசியல் மீடியா தளங்களிலும் இதற்கான இணைப்பு கிடைக்கும். குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பிப்ரவரி 18-ம் தேதியை. அன்று நள்ளிரவு 12:45 முதல் நாசா தன் நேரடி ஒளிபரப்பைத் துவங்குகிறது.
இந்த நிகழ்வின் லைவ் நாசாவின் அனைத்து சோசியல் மீடியா தளங்களிலும் கிடைக்கும். உங்கள் வசதிக்காக நாசாவின் யூட்யூப் தளத்தின் லிங்க் இதோ!

அடுத்து ஸ்பேஸ்எக்ஸ் (SpaceEx) நிறுவனத்தின் செவ்வாய்க்கு மனிதர்களை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் ஸ்டார்ஷிப் விண்கலங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களுடன் சந்திக்கிறேன்.




இந்த நிகழ்வை மிக அழகாக விளக்கப்படமாக வரைந்திருக்கிறார் Tony Bela என்பவர். அது இதோ உங்களுக்காக....


டிஸ்கி: ஜனவரி 2021-ல் ஃபேஸ்புக்கில் தொடராக நான் எழுதிய பதிவின் தொகுப்பு!

Wednesday 20 December 2017

மர்மங்கள் நிறைந்த டுங்குஸ்கா நிகழ்வு – இன்றும் அவிழாத முடிச்சுகள்!

சைபீரியாவின் டுங்குஸ்கா ஆறு சலசலவென ஓடிக்கொண்டிருந்தது. பொதுவாக பனியால் மூடப்பட்டிருக்கும் பிரதேசம் அது. வெய்யில் காலம் அப்போது தான் துவங்கியிருந்தது. அங்கிருந்து சுமார் 40 கிலோ மீட்டர்கள் தொலைவில் தனது கலைமான்களின் தோலினால் செய்யப்பட்ட குடிலில் விழித்தபடி படுத்திருந்தார் எவென்கி பழங்குடியினரான முதியவர் ஒருவர்.

‘அயால்டி’ என்று முணுமுணுத்துக்கொண்டார். எவென்கி மொழியில் நற்காலை வணக்கங்கள். இன்றைய நாள் இனிதே துவங்க வேண்டும். அவரிடம் 200 கலைமான்கள் இருந்தன. அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தவிர மகனை அருகிலிருக்கும் தோல் பதப்படுத்தும் இடத்திற்கு போகச்சொல்ல வேண்டும். வெகு நாட்களாக தேங்கிக் கிடக்கிறது.

எழுந்து வெளியில் வந்தார். திடீரென்று வானம் இரண்டாக பிளந்தது போல் இருந்தது. வானமே எரிவது போல தெரிந்தது. இடி முழக்கம் கேட்டது. கண்களைக் குருடாக்கும் ஒளி எங்கும் பரவியது. தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். கடைசியில் அவரது காதில் கேட்ட ஓசை அவரது முதுகெலும்பு முறியும் ஓசை.

சிறிது நேரம் கழித்து கண்விழித்துப் பார்த்த போது வானத்தில் காளான் குடை போன்று கரும்புகை பரவிக்கொண்டிருந்தது. கரிய நிறத்தில் தார் போன்று மழை பெய்யத்துவங்கியது. அசையமுடியாமல் குரலெழுப்பி மகனை அழைத்தார். மனிதர்கள் இயற்கையை அழிப்பதனால் அக்டா கடவுள் கோபித்துக் கொண்டார். இயற்கையின் சக்திக்கு முன் நாம் ஒன்றுமில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தபோதே மீண்டும் நினைவு தப்பியது.

சேகரென் மற்றும் சுச்சான் எனும் சன்யாகிர் பழங்குடியின சகோதரர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரெனெ சூடான காற்று அவர்களைச் சுற்றிப் பரவியது. யாரோ தூக்கி எறிந்தது போல் பத்தடி தள்ளிப்போய் விழுந்தனர். என்ன நடந்தது என்று புரியாமல் அப்படியே அமர்ந்திருந்தனர். மீண்டும் அவர்களை யாரோ தூக்கி எறிந்தார்கள். இப்போது அவர்கள் விழுந்த இடம் நெருப்பினால் தகித்துக் கொண்டிருந்தது. இருவரும் அலறினர். காலுக்கு கீழே பூமி அதிர்ந்து நகர்ந்தது.

வானிலிருந்து மாபெரும் கல் ஒன்று விழுந்தது போன்று ஒரு பெரும் இடிமுழக்க ஓசை கேட்டது. தொலைவிலிருந்த தேவதாரு மரங்கள் முறிந்து கீழே சாய்ந்தன. சில மரங்கள் எரியத்துவங்கின. நூற்றுக்கணக்கான பீரங்கிகள் வானிலிருந்து குண்டுகளைப் பொழிவது போலிருந்தது. கண்ணைக் குருடாக்கும் வெளிச்சம் பரவியது. இருவரும் கண்களை மூடிக்கொண்டனர். மீண்டுமொரு முறை இடியோசை கேட்டது.  உலகம் அழிந்து கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டனர். இடியோசை தொடர்ந்து பதினான்கு முறை கேட்டது.

அது 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் காலை 07:17 மணி. வானிலிருந்து சூரியனை விட பிரகாசமாக ஒளிப்பிழம்பு ஒன்று வேகமாக பூமியை நோக்கி வந்தது. விண்ணில் சுமார் 10 கிலோமீட்டர் உயத்திலேயே அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஒரு பலத்த வெடிச்சத்தத்துடன் சிதறியது. அது உண்டாக்கிய அதிர்வலைகளால் பூமியே அதிர்ந்தது. வானமே இரண்டாக பிளந்தது போலானது. பீரங்கிக் குண்டுகள் முழங்குவது போன்று ஒலியைத் தொடர்ந்து நெருப்பு ஜுவாலையாக பரவியது.

2000 சதுர கிலோமீட்டர்கள் அளவுக்கு அங்கிருந்த டாய்கா காடு அழிந்தது. 80 கோடி மரங்கள் எரிந்து சாம்பலாயின. ஏராளமான கலைமான்கள் உள்பட காட்டு உயிரினங்கள் கருகின.


                                                   Art courtesy : William K. Hartmann

ரிக்டர் அளவுகோலில் 6-ம் எண் அதிர்வு அலைகள் உணரத்தக்கதாக அதிர்வு இருந்தது. இந்த வெடிப்பின் மூலம் வெளிப்பட்ட சக்தியானது ஹிரோசிமாவில் வெடித்த அணுகுண்டை விட 1000 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகும். வெடிப்பிற்கு பிறகு காந்தப்புயல் வீசியது. திசைகாட்டிகள், மின்னணு சாதனங்கள் வேலை செய்யவில்லை. இடியோசை போன்ற அந்த ஒலி 800 கிலோமீட்டர் தொலைவிற்கு கூட கேட்டது. இந்த வெடிப்பின் ஓசை மூன்று லட்சத்து எண்பதாயிரம் சதுர கிலோமீட்டர்கள் தொலைவுக்கு உணரப்பட்டதாக மிரோவடெனியெ எனும் பத்திரிக்கைச் செய்தி தெரிவிக்கிறது.

தற்போது இருப்பது போன்று தகவல் தொடர்பு இல்லாத அந்தக்காலத்தில் இந்த பெருவெடிப்பு நிகழ்வு உலகின் பிறபகுதிகளுக்கு போய்ச் சேரவில்லை.
இது நிகழ்ந்த நாட்களின் முன்னும் பின்னும் வானில் துருவப்பகுதிகளில் நிகழும் அரோரா சுடரொளிகள் போன்ற வண்ணக் கலவையாக தோற்றமளித்தது. ஒரு மாதகாலத்துக்கு இரவு வெளிச்சம் நிறைந்ததாகவும் வானம் வண்ணக்குழம்பாக காட்சியளித்தது.


நியூயார்க் டைம் பத்திரிக்கையில் வானில் நிகழும் அதிசயம் என்று இந்த வண்ண ஒளிகளைப் பற்றிச் செய்தி வெளியிட்டது.  ரஷ்யாவில் ஏதோ பெரியதாக நிகழ்ந்திருக்கிறது என்ற அளவு மட்டுமே விஷயம் தெரிய வந்திருந்தது. என்ன நிகழ்ந்தது என்பதை உலகம் அறிந்திருக்கவில்லை.

இந்த வெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்று பல கோட்பாடுகள் உலவுகின்றன.

கோட்பாடு 1 – விண்கற்கள் :

பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு இதுவே.

டுங்குஸ்கா நிகழ்வு 1908-ஆம் ஆண்டே நிகழ்ந்தாலும் அதைப்பற்றிய முதல் ஆராய்ச்சி நடக்க 19 ஆண்டுகள் பிடித்தது. மனிதநடமாட்டம் இல்லாத பகுதி என்ற காரணம் ஒன்று. தவிர ரஷ்ய அரசும் இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. முதல் உலகப்போர் மூளும் அபாயம் இருந்த நேரம் அது. மேலும் ரஷ்யப்புரட்சி வெடிக்கும் சூழ்நிலை வேறு இருந்தது.

1920 முதல் பீட்டர்ஸ்பர்க் கனிமவியல் அருங்காட்சியகத்தில் லியோனிட் குலிக் என்பவர் வேலை பார்க்கத் தொடங்கியிருந்தார். அவரது வேலைகளில் ஒன்று சோவியத் யூனியனில் விழும் விண்கற்கள், எரிகற்களைச் சேகரித்து ஆராய்வதாகும்.


அவருக்கு 1908-ல் டுங்குஸ்காவில் நிகழ்ந்த சம்பவம் குறித்த தகவல் கிட்டியது. அது விண்கல்லாகத்தான் இருக்கும் என்று எண்ணிய அவர் 1921-ல் முதற்கட்ட பயணத்தை மேற்கொண்டார். சம்பவத்தை நேரில் கண்டவர்களிடம் பேசினார். அவற்றைப் பதிவு செய்து கொண்டு திரும்பினார். மீண்டும் 1927-ல் பயணித்து டுங்குஸ்காவிற்கு அருகிலிருக்கும் வனவர வர்த்தக நிலையத்தினை அடைந்தார். (இந்தப் பகுதிகளின் பெயர்களுக்கும், வாழும் மனிதர்களின் பெயர்களுக்கும் தமிழோடு தொடர்பிருப்பது ஆராயப்படவேண்டிய ஒன்று.)

அங்கு சென்று சேர அவருக்கு இரண்டு மாதங்கள் பிடித்தது. அங்கிருந்த எவெங்கி பழங்குடியினரின் துணையோடு மிகுந்த இன்னல்களோடு சம்பவ இடத்தை அடைந்தார். முதலில் அந்த பழங்குடியினர் அங்கு வர சம்மதிக்கவே இல்லை. கடவுள் தண்டித்த இடம், அக்டா கடவுளால் சபிக்கப்பட்ட இடம் என்று அவர்கள் தயங்கினார்கள். சிறிது நாட்கள் கழித்து ஓருவழியாக சம்மதிக்க வைத்து அந்த இடத்தை நெருங்கும் போது எங்கும் மரங்கள் எரிந்து விழுந்து கிடப்பதைக் கண்டார். 



வெடிப்பு நிகழ்ந்த மையப்புள்ளியிலிருந்து பத்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு மரங்கள் விழுந்து கிடந்தன.  அவை சைக்கிளில் உள்ள ஆரங்கள் போன்று விழுந்திருந்தன. ஆனால் அவர்களால் அங்கு விண்கல்லின் மிச்சத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. மோதிய விண்கல்லின் எந்த ஒரு தடயமும் சிக்கவில்லை. மோதியதால் ஏற்படும் பள்ளமும் காணப்படவில்லை. அவர்கள் கண்டதெல்லாம் பெருமளவில் சாய்ந்து கிடக்கும் தேவதாரு மரங்களை மட்டுமே.  அதிலும் பெருமளவு மரங்கள் விழுந்து கிடக்க ஒருசில மரங்கள் முழுமையாக நின்று கொண்டிருந்தன. அவர்கள் எடுத்த புகைப்படங்கள் மூலமாகவே உலகின் பிற பகுதிகளுக்கும் இந்தச் செய்தி போய்ச் சேர்ந்தது.

குலிக் குழுவினரின் மூன்றாவது பயணத்தின் போது அங்கு துளைகளிட்டு சோதனை செய்து பார்த்தனர். ஆயினும் இது விண்கல்லின் விளைவு என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

குலிக்கும் அவரது குழுவினரும் 1939 வரை பத்து முறை பயணம் மேற்கொண்டு மண் மாதிரிகளை எடுத்து வந்தனர். பின்னர் குலிக் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று நாசிப்படைகளால் பிடிபட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் ஒருவித நச்சுக்காய்ச்சலால் 1942-ல் இறந்து போனார்.

1957-ல் ரஷியாவைச் சேர்ந்த கனிமவியலாளரான யாவ்னில் என்பவர் குலிக் குழுவினர் கொண்டு வந்திருந்த மண்மாதிரிகளைச் சோதனை செய்து அதில் நிக்கல், கோபால்ட் போன்ற தனிமங்கள் இருப்பதை உறுதி செய்தார். இதனால் வெடிப்புக்குள்ளானது ஒரு இரும்பு விண்கல் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் பின்னாளில் அவர் சோதனை செய்த மண்மாதிரி டுங்குஸ்காவிலிருந்து கொண்டு வந்தது அல்ல எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 1947-ல் சிக்கோட்-அலின் எனும் மலைப்பகுதியில் விழுந்த விண்கல்லின் மாதிரி இடம் மாறியிருந்தது தெரியவந்தது.

அருகாமையிலிருந்த செக்கோ ஏரியில் இந்த விண்கல்லின் பாகம் இருக்கக்கூடும் என்று 2007-ல் இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒரு கருத்தை முன்வைத்தனர். ஏனெனில் அந்த ஏரியானது இந்த வெடிப்பிற்கு முன்னர் இருந்திருக்கவில்லை. காஸ்பெரினி எனும் விஞ்ஞானி அந்த ஏரியின் ஆழத்தில் 10 மீட்டர் விட்டமுள்ள விண்கல்லின் பாகம் கண்டிப்பாக இருக்கிறது என்றார்.

அது ஆழமான ஏரியில்லை என்பதால் ரஷ்யர்கள் அடியில் சென்று துளையிட்டுப் பார்த்தால் கிடைத்துவிடும் என்ற அவரது கருத்தை 2008-ல் அவரே மறுதலிக்க நேர்ந்தது. ஏனெனில் விண்கல் ஏரியில் விழும் பாதையில் நன்கு வளர்ந்த மரங்கள் முழுமையாக இருந்தன. அவை எரிந்து சாம்பலாகியிருக்க வேண்டும் அல்லது கீழே சாய்ந்திருக்க வேண்டும். இரண்டுமே நடவாததால் இக்கருத்தும் பொய்த்துப் போனது. பின்னாட்களில் அந்த ஏரி 280 ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

1966-ல் வாசிலி ஃபெசென்கோவ் என்பவர் டுங்குஸ்காவில் விழுந்த விண்கல்லின் பயணத்தைக் கணித்துச் சொன்னார். சூரியனை ஏராளமான விண்கற்கள், குறுங்கோள்கள் சுற்றி வருகின்றன. பூமியின் வளிமண்டலத்தினுள் நுழையும்போது சிறு விண்கற்கள் எரிந்து விடுகின்றன. இது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. நமது வளிமண்டலம் வலிமையானதாகையால் அது நம்மைப் பாதுகாக்கிறது. பூமியின் பரப்பில் பெரும்பகுதி கடலாதலால் நம் கவனத்திற்கு வரவில்லை.

ஆனால் பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைந்த பெரிய அளவிலான விண்கல் டுங்குஸ்காவில் வெடித்துச் சிதறியது தான். இது சைபீரியாவில் விழுந்திருந்தால் 5 லட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும். மனித நடமாட்டமில்லாத இடத்தில் விழுந்ததால் மனித இனம் பிழைத்தது.

1972-ல் கூட ஒரு நெருப்புப்பந்து போன்று எரிகல் பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைந்து உரசியவாறு சென்றது.  US19720810 என்று பெயரிடப்பட்ட அந்த எரிகல்லின் வீடியோ, புகைப்படப்பதிவுகள் The great daylight fireball என்று கூகுளில் தேடினால் கிடைக்கும். பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைந்து சென்றமையால் அதன் பாதை சிறிது மாற்றமடைந்திருக்கிறது.

அது மட்டும் விழுந்திருந்தால் சைபீரிய விண்கல்லைப்போன்றொரு பெருவெடிப்பு நிகழ்ந்திருக்கும். அது கனடா நாட்டின் மேல் விழப்போவதாக அவதானிக்கப்பட்டது. அவ்வாறு நிகழ்ந்திருந்தால் கனடா எனும் நாடே இல்லாமல் போயிருக்கக்கூடும். அந்த எரிகல்லின் வீடியோ இதோ:




2013-ல் யூரல் மலைத்தொடர் அருகே அமைந்துள்ள செல்யாபின்ஸ்க் எனுமிடத்தில் 20 மீட்டர் நீளம் கொண்ட ஒரு எரிகல் வானில் சுமார் முப்பது கிலோமீட்டருக்கு மேல் வெடித்து சிதறியது. அதனால் வெளிப்பட்ட வெடிப்பு அலைகளினால் சுமார் 8000 கட்டடங்களில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. 2000 பேருக்கு மேல் காயமுற்றார்கள்.

இதன் வெளிச்சமானது சூரியனை விட பிரகாசமாய் இருந்தது. அதீத வெளிச்சத்தினால் நிறைய பேருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டது. தோல் எரிச்சல் ஏற்பட்டது. தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாகையால் பள்ளிகள், தொழிற்சாலைகள் என அனைவருக்கும் விடுமுறையளிக்கப்பட்டது. கீழே அதன் வீடியோ பதிவைக் காணலாம்.


சூரியனின் பின்புறமிருந்து வந்ததனால் செல்யாபின்ஸ்க் எரிகல் சூரிய ஒளியால் மறைக்கப்பட்டிருந்தது. பூமியின் வளிமண்டலத்தை அடையும் வரை அது கண்டுபிடிக்கப்படவே இல்லை. ஒளிப்பிழம்பாய் இந்த விண்கல் வானில் செல்வதை பலர் படம் பிடித்துள்ளனர். யூட்யூபில் நிறைய காணொளிகளும் கிடைக்கின்றன.
இதன் இயக்க ஆற்றலானது ஹிரோஷிமா அணுகுண்டை விட 35 மடங்கு அதிகமானதாகும். கிட்டத்தட்ட 500 கிலோ டன் எடை கொண்ட அணுகுண்டை ஒத்திருந்தது.
20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அரிசோனா மாகாணத்தில் விழுந்த விண்கல்லினால் ஏற்பட்ட மாபெரும் பள்ளம் இன்றும் பார்வையாளர்களை ஈர்க்கிறது. அது ஏற்படுத்திய வெடிப்பதிர்வு 3.5 மெகாடன் அணுகுண்டை போன்றது.

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் விழுந்த சிக்சுலுப் விண்கல் டைனோசர்கள் உள்பட பூமியில் இருந்த உயிரினங்களையும் பூண்டோடு அழித்தது. இந்த விண்கல் சுமார் 15 கிலோமீட்டர் அளவு விட்டமுடையதாக இருந்தது. இதன் பள்ளம் தற்போதும் மெக்சிகோவில் உள்ள யுகாடன் தீபகற்பத்தில் இருக்கிறது.

இன்றும் டுங்குஸ்காவின் விண்கல் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. டுங்குஸ்கா நிகழ்வு குறித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் ரஷ்யாவில் வெளியாகியிருக்கின்றன. 1949-ல் கண்டுபிடிக்கப்பட்ட படோம்ஸ்கி எனும் பெரிய பள்ளம் டுங்குஸ்கா விண்கல்லால் ஏற்பட்டது தான் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அது 300 வருடங்கள் பழமையானது.




சில சந்தேகங்கள்:

டுங்குஸ்கா நிகழ்வில் கீழ்க்கண்ட விஷயங்கள் கேள்விக்குறியவை:

1. பொதுவாக விண்கற்கள் திசையை மாற்றிப் பயணிக்காது. டுங்குஸ்காவில் வெடித்த பொருள் தெற்கு திசையிலிருந்து வந்தது. வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து 225 கிலோமீட்டர் தொலைவில் கெஷ்மா என்ற இடத்தின் மேலிருக்கும் போது அது அதன் திசையை திடீரென கிழக்கு நோக்கி மாற்றிக் கொண்டது.

2.      ப்ரியோப்ரெசென்கா எனும் இடத்தின் மேல் செல்லும்போது வடக்கு திசையை நோக்கி தன் பயணத்தை மாற்றிக்கொண்டு டாய்கா காடுகளின் மேல் 10 கிலோ மீட்டர் உயரத்தில் வெடித்து சிதறியது.

3.      விண்கற்கள் விடியற்காலையில் பூமியைத் தாக்குவது அபூர்வமான நிகழ்வாகும்.

4.      பூமியின் வளைவு காரணமாக செர்பியாவில் காலை 7:17-க்கு கிடைக்கும் சூரிய ஒளி அதே நேரத்தில் லண்டனில் கிடைக்க வாய்ப்புகள் இல்லை. அதே போல வெடிப்பின் போது கிடைத்த ஓளிச்சிதறல் பூமியின் மறுபுறம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆனால், அங்கும் பலர் பார்த்ததாக தெரிவித்திருக்கின்றனர்.

மேற்கண்ட சந்தேகங்கள் இரண்டாவது கோட்பாட்டிற்கு வலுசேர்த்தன. அது நிகோலோ டெஸ்லா எனும் மாபெரும் மேதையின் ஒளிக்கதிர்.

கோட்பாடு 2 – டெஸ்லாவின் ஒளிக்கதிர் :

1908-ல் இந்நிகழ்வு நடந்த அதே சமயம் நியூயார்க் நகரத்தில் தனது வார்டன்க்ளீஃப் கோபுரத்தில் மூலம் கம்பியில்லா மின்சாரம், தகவல் தொடர்பு கதிர்களை உருவாக்கும் சோதனையில் ஈடுபட்டிருந்தார் நிகோலா டெஸ்லா. அதாவது மின்சாரம் கடத்த கம்பியோ, மின்நிலையங்களோ எதுவும் தேவையில்லை. வானில் கதிர்களைச் செலுத்தி பூமியின் மூலமாகவே மின்சாரத்தைக் கடத்தும் தொழில்நுட்பம். அதில் உருவான அழிவுக்கதிர்கள் தான் இந்த வெடிப்புக்குக் காரணம் என்றனர் சிலர்.

 டுங்குஸ்கா வெடிப்பு நிகழ்வதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு டெஸ்லா ஒருவரை வாஷிங்டன் நூலகத்திற்கு அனுப்பி சைபிரியாவின் வரைபடத்தை, அதிலும் டுங்குஸ்கா பகுதியின் வரைபடத்தைப் பெற்று வரச்செய்தார். இதையும் ஆதாரமாகச் சொல்கிறார்கள்.  வார்டன்க்ளீஃப் கோபுரத்தின் மின்தேக்கி மூலம் 100 கோடி வோல்ட் அளவிலான மின்சாரத்தை பெறும் வசதி இருந்தது என்கிறார் இந்தக்கருதுகோளை தீவிரமாக நம்பும் ஸ்ட்ரெப்கோவ்.


1917-ல் அமெரிக்க ராணுவம் வார்டன்க்ளீஃப் கோபுரத்தை வெடிவைத்துத் தகர்த்தது. அந்த சமயம் டெஸ்லா ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். சிகாகோ ரயில் நிலையத்தில் இது குறித்த தந்தி அவரிடம் தரப்பட்டது. அவர் அதை வாங்கினார். பிரித்துப் படித்தார். மீண்டும் மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். அவர் வாழ்வின் இறுதி வரை டெஸ்லா டவர் இடிக்கப்பட்டது குறித்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.

டெஸ்லாவின் ஆராய்ச்சி மட்டும் வெற்றி பெற்றிருந்தால் இந்த உலகில் அனைவருக்கும் இலவச மின்சாரம் கிடைத்திருக்கும். அந்த ஆராய்ச்சியை தொடர விடாமல் தடுத்தவர்கள் யாரென்று அவரது ஆருயிர் நண்பரான எடிசனுக்கே வெளிச்சம்(!)

கோட்பாடு 3 – இயற்கை எரிவாயு :

இயற்கை எரிவாயு பூமியின் 3000 அடி ஆழத்தில் திரவநிலையில் இருந்த அது பீரிட்டு வெளி வந்த போது வாயுவாக மாறி விரிவடைந்து வெடித்திருக்கக்கூடும் என்று இயற்பியல் விஞ்ஞானியான குண்ட் கருதினார். இதற்கு ஆதாரமாக மரங்கள் விழுந்து கிடக்கும் முறையையும் அங்கு கிடைத்த இரசாயனங்களின் மாதிரியையும் எடுத்துக் காட்டினார்.

கோட்பாடு 4 – கருந்துளை :

அண்டவெளியில் ஒரு கருந்துளையானது நமது பூமியின் அருகில் வந்தபோது வெடித்துச் சிதறியது என்பது அமெரிக்க விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஜாக்சன் மற்றும் மைக்கேல் ரியானின் கருத்து. 1973-ல் இந்தக்கருத்தை முன்வைத்தார்கள். மேலும் விண்கல் வெடித்திருந்தால் அதன் சிறு பகுதி கூட ஏன் கிடைக்கவில்லை என்பதை ஆதாரமாகக் கூறினர். ஆனால் பெரும்பாலான விஞ்ஞானிகள் இக்கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

கோட்பாடு 5 – ஏலியன் விண்கலம் :

அலெக்சாண்டர் கசன்செவ் எனும் ரஷ்ய அறிவியல் எழுத்தாளர் இது வேற்றுக்கிரக வாசிகளின் விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து வந்தபோது அதில் கோளாறு ஏற்பட்டு அணு வெடிப்பு ஏற்பட்டது என்றார். 1946-ல் இந்தக் கோட்பாட்டை அவர் முன்வைத்தார்.

ஹிரோசிமாவில் நிகழ்ந்த அணுகுண்டு வெடிப்பினால் அங்கு அழுத்த அலைகள் ஏற்பட்டு அங்கிருந்த மரங்களின் கிளைகள் முறிக்கப்பட்டு இலைகள் உதிர்ந்து எப்படிக்காணப்பட்டனவோ அது போலவே இங்கும் காணப்பட்டதை ஆதாரமாகக் காட்டினார். மேலும் மரங்களின் மேல் காணப்பட்ட எரிந்த தடயங்கள் கதிர்வீச்சினால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக ஒரு புறமாக மட்டுமே காணப்பட்டது. இது அவரது கூற்றுக்கு மேலும் வலு சேர்த்தது.

கோட்பாடு 6 – வால்மீன் :

1930-களில் விப்பிள் எனும் வானவியல் நிபுணர் இது ஒரு வால்மீன் என்கிறக் கருத்தை முன் வைத்தார். விண்மீன்கள் பெரும்பாலும் பனிக்கட்டிகளாலும் விண் தூசுகளாலும் ஆனவை. இதனால் இவை அழுக்குப் பனிப்பந்துகள் என்று செல்லமாக அழைக்கப்படுகின்றன.

 நமது வளிமண்டலத்தை அடைந்ததும் வால்மீனிலிருந்த பனிக்கட்டிகள் உருகத்தொடங்கி வெடித்துச் சிதறி ஒன்றுமில்லாமல் போயின என்றார் அவர். டுங்குஸ்காவில் எந்தவித அன்னியக் கனிமங்களும் கிடைக்காததால் இந்த முடிவு ஏற்கத்தக்கதாக இருந்தது.

கோட்பாடு 7 – பொருளும் அதன் நிழல் பொருளும் :

அதென்ன நிழல்பொருள்? எதிர்ப்பொருள் தானே சரி என்று கேட்கலாம். அல்ல. எதிர்ப்பொருள் என்பது வேறு, நிழல் பொருள் என்பது வேறு. மேலும் இந்த நிழல்பொருள் அல்லது பிரதிபலிப்புப் பொருள் பற்றிய கோட்பாடு தனியாக அலசப்பட வேண்டியது.

இந்தக் கோட்பாடு பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை வைத்துக் கொண்டு இயற்பியல் விஞ்ஞானிகளே அடித்துக் கொண்டுள்ளனர். எனவே இதை நாம் விட்டுவிட்டு அடுத்து ஒரு அட்டகாசமான கோட்பாட்டுக்கு செல்வோம்.

கோட்பாடு 8 – வெர்னஷாட் :

இதென்ன புரியாத பெயராய் இருக்கிறதே என்கிறீர்களா? பூமியின் மையத்திற்கு ஒரு பயணம் என்ற நாவலை / திரைப்படத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தக் கதையை எழுதியவர் ஜூல்ஸ் வெர்னே என்பவர். அவரது பெயரைத் தான் இதற்கு வைத்திருக்கிறார்கள்.

பூமியின் அடியில் உள்ள லித்தோஸ்பியருக்கும் கீழே கரியமில வாயு படர்ந்திருக்கும். அதன் மேல் கவசம் போல டெக்டானிக் தகடுகள் இருக்கும். பூமியின் மேலடுக்கு கடின பாறைகளால் தடிமனான மேலோட்டுடன் இருக்குமிடங்களில் பூமியின் காந்தப்புல இடையூறின் விளைவாக எரிவாயு அழுத்தப்பட்டு அதில் பிளவு ஏற்படும். அப்போது எரிமலைக் குழம்பு சூடான எரிவாயுக்காற்றோடு நிலத்தின் மேற்பரப்பை பெயர்த்தெடுத்து விண்ணில் ராக்கெட் செல்வது போல செலுத்தும். இது பூமியைத் தாண்டி விண்வெளிக்கே கூட அனுப்பும் அளவு வல்லமை மிக்கது.

அதன் பின்னர் புவி ஈர்ப்புச்சக்தியின் விளைவால் மீண்டும் பூமிக்கே திரும்பி வரும். இதற்குள்ளாக பூமி தன்னைத்தானே சுற்றி வருவதால் சற்று நகர்ந்திருக்கும். பெயர்த்தெடுக்கப்பட்ட பூமியின் பகுதி பூமியின் மறுபுறத்தில் போய் விழும். அதாவது இங்க இருக்கற தமிழ்நாட்டை அப்டியே தூக்கிட்டுப் போய் டெல்லிக்கு பக்கத்துல இல்லை, அமெரிக்காவுக்கு பக்கத்தில் போய் வைப்பது! நம்பும்படியாக இல்லை அல்லவா?

இதன் அதிர்ச்சி அலைகள் பூமியெங்கும் பரவக்கூடியது. டைனோசர்கள் அழிந்ததற்கு கூட விண்கல் காரணமல்ல வெர்னஷாட் தான் என்கிறார்கள்.

கோட்பாடு 9 – அக்டா கடவுளின் செயல் :

அந்தப்பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வந்த எவங்கி பழங்குடியினரின் நடவடிக்கைகளில் கோபமடைந்த அக்டா எனும் (இடிகளை உருவாக்கும்) கடவுள்  அவர்களைத் தண்டிக்க அனுப்பிய இடி, மின்னல்கள் தான் அழிவை உருவாக்கியது என்பது அவர்களின் வாதம்.
இன்னமும் டுங்குஸ்காவில் நிகழ்ந்தது என்ன என்பதில் ஆராய்ச்சிகள் முடிவதாக இல்லை. ஒரு மாபெரும் மர்மமாகவே இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது. 



எது எப்படியோ, பூமியைத் தாக்கக்கூடிய அபாயகரமான விண்கற்களைப் பற்றியும் அவற்றின் திசையைப்பற்றியும் 95 சதவிகிதம் தெரிந்து கொண்டாகிவிட்டது என்கின்றனர் விஞ்ஞானிகள். இவர்கள் சொல்வது ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான விட்டமுடைய விண்கற்கள். அதே சமயம் 100 மீட்டருக்கும் கீழே விட்டமுடைய விண்கற்கள் பற்றிய ஆராய்ச்சி ஐந்து சதவிகத அளவு தான் முடிந்திருக்கின்றதாம். வெறும் 20 மீட்டர் விட்டமுடைய செல்யாபின்ஸ்க் விண்கல் ஏற்படுத்திய தாக்கமே பலமடங்கு வீரியமிக்கதாய் இருந்தது.

சைபீரிய விண்கல் விழுந்த இடமான டுங்குஸ்கா மனித நடமாட்டமில்லாத இடம். அதுவே தமிழ்நாட்டில் விழுந்திருந்தால் இன்று தமிழ்நாடு இந்திய வரைபடத்தில் இருந்திருக்காது. (இப்ப இருக்கற நிலைமைக்கு அதாவது விழுந்து தொலைத்திருக்கலாம் என்கிறீர்களா?)


பெட்டிச்செய்தி:

சுட்ஸ்தலேவ் எனும் வணிகர் வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து வைரங்கள் கண்டெடுத்ததாக ஒரு செய்தியும் சொல்லப்படுகிறது. இன்று டுங்குஸ்கா வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு சயான்ரிங் எனும் நிறுவனத்தினர் சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்க்கில் க்ளிக் செய்து பயணம் செய்ய தயாராகலாம். http://www.sayanring.com/tour/view/205/

*****************************************************************************************

Thursday 25 May 2017

அலெக்சாண்டரின் குதிரை!

அபியும் நானும் படம் பார்த்திருப்பீர்கள். அதில் பிரகாஷ்ராஜ் தன் மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக பரீட்சைக்கு விழுந்து விழுந்து படிப்பார். அலெக்சாண்டரின் குதிரை பெயர் கேட்பார்கள் என்று நண்பர் சொல்ல அதற்கு விடை தேடி அலைவார்.
உங்களுக்கு அந்தக்குதிரையின் பெயர் தெரியுமா?
பேரழகின் உருவமாக சிலிர்க்க வைக்கும் அழகோடு நின்று கொண்டிருந்தது அது. சிறுவனான அலெக்சாண்டரின் தந்தை பிலிப்சுக்கு பரிசாக வந்திருந்த குதிரை அது. அரண்மனை அருகிலேயே இருந்த லாயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தன் அமைச்சர்களுடன் அதனைப் பார்வையிடச் சென்றார் மன்னர் பிலிப்ஸ். குதிரையேறும் வீரர்கள் அதன் மீதேறச் செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. யாருக்கும் அடங்க மறுத்தது அது. சிறுவனான அலெக்சாண்டரும் அமைதியாக அந்தக் குதிரையின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
முரட்டுக்குதிரையைப் போய் பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள். தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்து பார்க்கக் கூடாது தான். இந்தக் குதிரையினால் ஒன்றும் பயனில்லை என்று கோபமுற்ற அரசர் பரிசளித்த தெசாலிக்கே (Thessaly) திரும்ப அனுப்ப உத்தரவிட்டார்.
அழகான அக்குதிரையை விட்டுவிட அலெக்சாண்டருக்கு மனமில்லை. தான் அந்தக்குதிரையை அடக்கிக்காட்டுவதாக தந்தையிடம் சொன்னார். ஆனால் பிலிப்சோ அதற்கு மறுத்து விட்டார். குதிரையை கையாளும் பயிற்சி பெற்ற வீரர்களாலேயே அடக்க முடியாத குதிரையை சிறுவனான அலெக்சாண்டர் கட்டுப்படுத்த முடியுமா? ஆனால் கெஞ்சிக் கூத்தாடி இறுதியில் ஒருவழியாக சம்மதம் பெற்றார் அலெக்சாண்டர்.
ஏற்கனவே குதிரையின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்ததில் அந்தக் குதிரையின் நிழல் அதனைப் பயமுறுத்தும் விதத்தில் கீழே விழுந்து கொண்டிருந்ததைக் கவனித்திருந்தார். இதன் காரணத்தினாலேயே அது முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது.
மெதுவாக குதிரையை அணுகினார், அதன் லகானைப் பிடித்தார். கழுத்துப்பகுதியை தட்டிக்கொடுத்து நீவி விட்டார். எந்தக்குதிரைக்கும் தன்னை ஒருவன் அணுகினால் அவன் எதற்காக அணுகுகிறான் என்பது அதன் உள்ளுணர்வுக்குப் புரியும். தான் அதனை தொந்தரவு செய்ய வரவில்லை என மென்மையாக அதன் காதில் சொன்னார்.
பத்தொன்பது வயதில் மன்னராகி வெறும் பன்னிரெண்டு ஆண்டுகளில் உலகையே வென்று முப்பத்தி இரண்டு வயதில் மறைந்த மாவீரன் அலெக்சாண்டர். அதன் உள்ளுணர்வுக்கு புரிந்ததோ என்னவோ சற்று அமைதியாக நின்றது. அதன் நிழல் அதன் கண்களுக்குத் தெரியாதவாறு திருப்பி நிறுத்தினார். பொறுமையாக அதன் மீது ஏறி உற்சாகப்படுத்தி ஓடச்செய்தார். பாய்ந்தோடியது புசபாலஸ். (Bucephalus) ஆம். அலெக்சாண்டரின் குதிரை பெயர் அது தான்.
பிலிப்ஸ் தன் மகனை உச்சி மோர்ந்து மசடோனியாவை விட மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவப்போகிறாய் என்று பாராட்டினார். அவரது அந்தக் கணிப்பும் புசபாலஸ் ஓரு சிறந்த குதிரை என்ற அலெக்சாண்டரின் கணிப்பும் மிகச்சரியாகவே இருந்தது. அலெக்சாண்டர் எளிதில் அதன் மீது ஏறும் விதத்தில் மண்டியிட்டு அமர்ந்து அவரை ஏற்றுக்கொள்ளும். போர்க்குதிரைகள் பல இருந்தாலும் புசபாலஸ் அலெக்சாண்டரின் தனித்துவமிக்க குதிரையாக திகழ்ந்தது.
அலெக்சாண்டரின் வெற்றிகளிலெல்லாம் புசபாலஸின் பெயர் கூடவே பயணித்தது. சில சமயங்களில் அலெக்சாண்டரைத் தவிர வேறு எவரையும் அதன் மீது ஏறிப் பயணிக்க அனுமதிக்கவில்லை. இனி வெல்வதற்கு இந்த உலகில் எதுவுமிலலை என வாழ்ந்து சரித்திரம் படைத்த அலெக்சாண்டர் தனது போர்ப்பயணங்களுக்கெல்லாம் இதனையே அவர் பயன்படுத்தினார்.
அவ்வாறான போர்களில் (Hydaspes) ஒன்றில் மோசமாக காயம் பட்டிருந்தது புசபாலஸ். அலெக்சாண்டரும் மிகவும் களைப்புற்றிருந்தார். தன் எஜமானனை அவ்விடத்திலிருந்து வெகு தூரத்திற்கு சிரமத்துடன் சுமந்து சென்று பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்த பின்னர் கீழே விழுந்து இறந்தது புசபாலஸ். ஆனால், அதிலிருந்து குணமடைந்து 30 ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் இறந்தது என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
ராஜ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டு அதன் நினைவாக அவ்விடத்தில் ஒரு நகரமும் நிர்மாணம் செய்யப்பட்டது. அந்த நகரத்தின் பெயர் புசபாலியா! (தற்போது பாகிஸ்தானில் உள்ளது!)

Saturday 3 September 2016

மறைக்கப்படுகிறதா நம் வரலாறு?


மரியானா பள்ளம் பற்றிய 2-வது பாகத்தின் இறுதியில் பத்து நிகற்புதம் மற்றும் அற்புதம் பற்றிக் குறிப்பிட்டு அவற்றைப் பற்றித் தேடித் தெரிந்து கொள்ளுமாறு எழுதியிருந்தேன். எத்தனை பேர் தேடினீர்கள் எனத் தெரியாது. 
சரியான முறையில் தேடல் நிகழ்ந்திருந்தால் ஒரு தகவல்பிழையைச் சுட்டிக் காட்டியிருக்க முடியும். பத்து நிகற்புதம் என்பதற்கு கும்பம் என்று பெயர். அதாவது பத்து பில்லியன் = கும்பம். கீழ்க்காணும் அட்டவணையைப் பாருங்கள்:

இவையெல்லாம் தமிழர்களின் அளவீட்டு முறைகள். நாம் இதுவரை பகுத்தறியாத அளவீட்டு வகைகளைக் கூட நம் முன்னோர்கள் குறித்து வைத்துள்ளனர் என்றால் நமது மூதாதையர்களின் அறிவு எத்தகையது?
நமக்கு பொதுவாக ஒரு குணம் உண்டு. ஏதாவது ஒரு வார்த்தையின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்வதற்காக அகராதியைப் புரட்டுவோம். அதை அடைந்த பிறகும் அந்த வார்த்தையோடு நாம் நிறுத்தி விடுவதில்லை. அதன் கீழ் உள்ள வார்த்தை, மேல் உள்ள வார்த்தை என பார்வை விரிந்து கொண்டே சென்று அதிலேயே மூழ்கி விடுவோம்.
இதில் தவறில்லை. தேடல் பெரிதானால் தான் வாழ்க்கை பற்றிய புரிதலும் விரியும். நாம் யார்? நம் சரித்திரம் என்ன? நம் முன்னோர்கள் என்னென்ன சாதனைகள் படைத்திருக்கின்றனர்?
பாரத நாடு பழம்பெரும் நாடு. நீர் அதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்! 
உலகிற்கே கலாச்சாரத்தையும், பண்பாட்டினையும் கற்றுக்கொடுத்த நாடு. மிகவும் பழமை வாய்ந்த, அதே சமயத்தில் நாகரிகமும் செழித்து வளர்ந்த நாடு. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பே திட்டமிட்ட வீடுகளுடனும் கழிவறைகளுடனும் வாழ்ந்த  நாடு. வாழும் கலையான யோகாவை இந்த உலகிற்கு கற்றுத்தந்த நாடு. எண்களை, அதிலும் முக்கியமாக பூஜ்ஜியத்தை உலகிற்கு அளித்த நாடு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த நாடு.
உலகின் முதல் மருத்துவ முறையான ஆயுர்வேதத்தை அறிமுகப்படுத்திய நாடு. நதிகளை இணைத்து நீர் மேலாண்மை, பாசன வசதி, தானாகவே சுத்திகரித்துக் கொள்ளும் விதமான கழிவுநீர் அமைப்பு என அனைத்து துறைகளிலும் உயர்ந்து விளங்கிய நாடு. 
வானியல், உலோகவியல், கட்டிடக்கலை, கணிதம், மருத்துவம், தர்க்கவியல், வரைபடவியல், கனிமவியல் என எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் மகத்தான பங்கை அளித்துள்ள நாடு.
மருத்துவம் 
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆயுர்வேத மருத்துவ முறைகளை கையாண்டார்கள் இந்தியர்கள். மருத்துவத்தின் தந்தை எனப்படும் சரக்கா, ஆத்ரேயா, தன்வந்தரி போன்ற மருத்துவர்கள் ஏராளமான மருத்துவக்  குறிப்புகளை எழுதி வைத்துள்ளார்கள். 
உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர் சுஸ்ருதா. மூன்றாம் நூற்றாண்டிலேயே கண்புரை அறுவைச் சிகிச்சையைச் செய்தார் இவர். ஒரு வளைந்த ஊசியின் மூலம் கண்புரை உள்ள விழியின் வில்லையை நீக்கி வெதுவெதுப்பான வெண்ணெயில் சில நாட்களுக்கு ஊற வைத்து அது குணமான பின்னர் மீண்டும் பொருத்தினார். சுஸ்ருதரிடமிருந்து சிகிச்சை பெற உலகெங்கும் இருந்தும் மக்கள் வந்தனர்.
வானியல் 
கோள்களின் இயக்கத்தையும், பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்பதையும் செயற்கைக் கோள்கள் அனுப்பி கண்டுபிடிக்கின்றனர் இன்றைய விஞ்ஞானிகள். இதனைக் கணிதச் சமன்பாடுகளால் ஏற்கனவே கணித்துச் சொல்லி விட்டார் ஆர்யபட்டா. உலகம் சூரியனைச் சுற்றி வர ஆகும் காலத்தை ஐந்தாம் நூற்றாண்டிலேயே கணித்துச் சொன்னார் பாஸ்கராச்சாரியா. ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாடு பற்றி நம் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்துத் திருமணங்களில் அருந்ததி பார்ப்பது என்பது முக்கியச் சடங்காகும். சப்தரிசி மண்டலம் (Ursa Major) வடக்கு வானில் இரவு நேரத்தில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்று. வசிட்டரும் அருந்ததியும் (Mizar and Alcor) சப்தரிசி மண்டலத்தின் ஒரு பகுதியான விண்மீன் குழுவாகும். இவை இரட்டை நட்சத்திரங்களாகும். பெரும்பாலான மற்ற இரட்டை நட்சத்திரங்களை போல அல்லாமல் இவை ஒன்றையொன்று இணையாக சுற்றி வருகின்றன.  புதுமணத்தம்பதிகள் இந்த இரட்டை நட்சத்திரங்களை பார்த்து அவர்களை போலவே இணைபிரியாது வாழ வேண்டும் என்பதற்காக வானில் அருந்ததி பார்த்து ஆசி பெறும் நிகழ்வும் நடைபெறுகின்றது. இந்த இரட்டை நட்சத்திரங்களின் இவ்வியல்பை எந்த செயற்கைக்கோளை அனுப்பி தெரிந்து கொண்டனர் நம் முன்னோர்கள்?
ஒளியின் வேகம் வினாடிக்கு ஒரு லட்சத்து எண்பத்து ஆறாயிரம் மைல்கள் என்பதை நவீன அறிவியல் சென்ற நூற்றாண்டில் தான் உறுதிப்படுத்தியது. ஆனால் இதை அன்றே குறிப்பிட்டிருக்கின்றது உலகின் மிகப் பழைமையான ரிக் வேதம்.
வானியலில் பல்வேறு எல்லைகளை நம் முன்னோர்கள் ஏற்கனவே தொட்டுவிட்டனர். தற்கால விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் அவற்றை மெய்ப்பிக்க மட்டுமே செய்கின்றன.
கல்வி 
இயற்கணிதம், நுண்கணிதம், கோணவியல், வடிவியல் போன்றவை உருவானது இங்கே தான். உலகின் முதல் பல்கலைக்கழகமான தக்சசீலாவிற்கு உலகெங்கிருந்தும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து கல்வி பயின்றனர். இப்பல்கலைக்கழகத்தில் அறிவியல், கணிதம், மருத்துவம், அரசியல், போர்த்திறன், ஜோதிடம், வானியல், இசை, மதம், தத்துவவியல் போன்ற அனைத்து கல்வி அம்சங்களும் பயிற்றுவிக்கப்பட்டது. நான்காம் நூற்றாண்டில் உருவான நாளந்தா பல்கலைக்கழகம் அனைத்து வசதிகளையும் கொண்ட முதல் பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது. பக்தியார் கில்ஜியால் அழிக்கப்பட்ட அதன் நூலகத்தில் இருந்த அநேக புத்தகங்களும் சூறையாடப்பட்டு விட்டன. இப்புத்தகங்கள் மட்டும் அழியாமல் கிடைத்திருந்தால்….?
உலோகவியல் 
உலோகக் களத்தின் கீழே வெப்பத்தை உண்டாக்கி பிறகு அந்தக் கலவையை குளிர வைத்து தேவையான உலோகத்தை பிரித்தெடுப்பது தான் பொதுவான வழக்கம். ஆனால் துத்தநாகம் (Zinc) அடங்கிய உலோகக் கருவினை வெப்பப்படுத்தும்போது அது 997 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் திரவமாக மாறுகிறது. அதனைத் தொடர்ந்து ஆயிரம் டிகிரி செல்சியஸை எட்டும்போது உடனடியாக வாயுவாக மாறிவிடுகிறது. 
மூன்றே டிகிரி வித்தியாசத்தில் திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு துத்தநாக கலவை மாறுவதால் அதனைப் பிரித்தெடுப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்களிடம் அதற்கான தொழில்நுட்பம் இருந்தது. உலோகக் களத்தை தலைகீழாக வைத்து அதன் மேற்பகுதியில் வெப்பமுண்டாக்கி கீழ்ப் பகுதியில் பெரிய பனிக்கட்டியை வைத்து அதன் மூலம் துத்தநாகம் வாயு நிலைக்கு சென்றுவிடாமல் திடநிலையில் பிரித்தெடுத்தனர்.
கலை 
மத்தியப்பிரதேசத்தின் ராய்சன் மாவட்டத்தில் உள்ள பீம்பேட்கா குகைகள் மூன்று லட்சம் ஆண்டுகள் பழமையானவை. அங்கு காணப்படும் 30 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலியோலித்திக் வகை ஓவியங்கள் அக்கால மனிதர்களின் வேட்டை முறை, நடனம் மற்றும் அவர்களின் பல்வேறு வாழ்க்கை முறையை எடுத்துச்சொல்லும் விதமாக இன்றும் நம்மிடையே இருக்கன்றன. ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பே அங்குள்ள குகைகளில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உலக நாடுகள் எல்லாம் செம்பு, தோல் ஆகியவற்றை நாணயங்களாகப் பயன்படுத்திய காலத்தில் இந்தியா தங்கத்தை நாணயமாகப் பயன்படுத்தியிருக்கிறது. இந்தியாவிலிருந்த தங்கத்தின் அளவு வேறெந்த நாட்டிலும் இல்லை. (‘இப்ப மட்டும்’ என்பவர்களுக்கு என் அன்பு!) மற்ற நாடுகள் கற்கால நாகரிகத்தோடு ஆடையென்ற ஒன்றையே அறிந்திராத காலத்தில், பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகள் உடுத்தி நாகரிகத்தில் திளைத்தவர்கள் நாம்.
உலகின் முதல் கப்பற்படை தமிழர்களுடையது. தெற்கு ஆசியாவை தம் வசப்படுத்தியிருந்தனர் சோழர்கள். கடல்வழிப் பயணங்களின் முன்னோடிகள் நாம். மிகப்பெரிய மரக்கலத்தை உருவாக்கி காற்றின் திசைகளை கொண்டு பயணம் செய்தது மட்டுமல்லாமல் கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியுள்ளார்கள். கப்பலை தோற்றுவித்து கப்பல் கட்டும் கலையில் சிறந்து விளங்கியதும் நாம்தான்.
வாஸ்கோடகாமா இந்தியாவைக் கண்டுபிடிப்பதற்காக பயணம் செய்து கோழிக்கோட்டிற்கு பிறகு கோவாவை அடைந்தபோது அவரை வரவேற்றது ஒரு குஜராத்தி வணிகர். வாஸ்கோடகாமாவினுடையது அப்போதைய ஐரோப்பாவின் மிகப்பெரிய கப்பல். அவரது கப்பலை விட பன்னிரண்டு மடங்கு பெரியதாக இருந்தது இந்த வணிகக்கப்பல் என்றால் நமது கப்பல் கட்டும் தொழில்நுட்பம் பற்றி மேலும் சொல்லத்தான் வேண்டுமா?
கப்பல் மட்டுமா? இராவணன் சீதையைக் கவர்ந்து, புஷ்பக விமானத்தில் பறந்து சென்ற கதையைப் படித்திருக்கிறோம். பாரத்வாஜரின் விமானங்களின் சாஸ்திரத்தில் மூன்று வகையான விமானங்களை பற்றிக் குறிப்பிடுகிறார். அவை, பூமியில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் விமானங்கள், ஒரு கோளிலிருந்து மற்றொரு கோளிற்கு செல்லும் விமானங்கள் மற்றும் ஒரு பிரபஞ்சத்திலிருந்து மற்ற பிரபஞ்சங்களுக்கு செல்லும் திறன் பெற்ற விமானங்கள் ஆகும். மேலும் விமானங்களை மறையச்செய்யும் திறன், மறைந்திருக்கும் விமானத்தை காண வைத்தல், ஒரு விமானத்தில் பேசும் ஒலியையும், அதன் காட்சியையும் மற்றொரு விமானத்தில் செல்லும் நபர்கள் காணும் திறன் போன்ற தொழில்நுட்பங்களைப்பற்றியும் அதில் விளக்குகிறார். 
ஞாபக சக்தியில் உயர்ந்து விளங்கினர் நமது முன்னோர்கள். வேதங்களெல்லாம் செவிவழியாகவே அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப்பட்டன.
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
நதிகளோ ஏராளம். அந்த நதிகளையொட்டிப் பரவிய நாகரீகத்தால் மாபெரும் விவசாய நாடு. விளையாத பயிர்கள் இல்லை. உற்பத்தியில் உலகிலேயே முன்னணியில் இருக்கும் நாடு. பரந்து விரிந்த குடி நீர்ப்பரப்பு. மனிதர்களை போலவே கால்நடைகளின் எண்ணிக்கையும் அதிகம். தங்கம், வைரம், இரும்பு, செம்பு, கிராஃபைட், பெட்ரோல், யுரேனியம் எனக் கிடைக்காத கனிமங்கள் இல்லை.
பாலை மணலைத் தவிர வேறு ஒன்றுமில்லாத துபாய் மிகப்பெரும் வர்த்தக நகரமாய் இருப்பது எப்படி? எந்த இயற்கை வளமும் இல்லாத சிங்கப்பூர் போன்ற சிறிய நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேறிக் கொண்டே இருக்கும் போது எல்லா வளமும் இருந்தும் நம் நாட்டிற்கு ஏன் இந்த நிலை? 
சரி, இந்தியாவின் நிலை தான் இப்படி. நமது தமிழகத்துக்கு வருவோம்.
தமிழ் இனத்தின் வரலாறு என்பது மிகத்தொன்மையானது. கல் தோன்றி மண் தோன்றாக்காலத்து முன் தோன்றிய மூத்த குடிகள் நாம். பண்பாடு, நாகரிகம் மற்றும் கலை எனக் கொடி கட்டிப்பறந்து அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கிய ஒரு இனம் தமிழ் இனம்.
உண்மையில் மனிதன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியா கண்டமே. இங்கு தோன்றிய மனிதர்கள் தான் மற்ற இடங்களுக்கு சென்று நாகரிகங்களைப் பரப்பியிருக்கிறார்கள். உலக நாகரிகம் சிந்து சமவெளியிலோ, சுமேரியாவிலோ அல்லது மெசபடோமியாவிலோ தோன்றியது அல்ல. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்கு, ஐந்தாயிரம் வருடங்கள் பழமையானது தான். ஆனால் தமிழ் நாகரிகம் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முந்தையது. 
அறிவியல் உலகம் எதையும் ஆராய்ந்து பார்த்து தெளிவு படுத்திய பின்னரே ஏற்றுக்கொள்ளும். குமரிக்கண்டத்தினைப்பற்றி இன்னும் முழுமையாக அறிவியல் உலகம் ஆராயவே இல்லை. அங்கிருக்கும் ரகசியங்கள் இன்னும் ரகசியங்களாகவே இருக்கின்றன. 
நமது பூம்புகாரின் ஒரு பகுதி கடலில் மூழ்கியுள்ளது. இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் 1993-ல் பூம்புகாரில் ஆய்வு மேற்கொண்டது. பின்னர் பணப் பற்றாக்குறையைக் காரணம் சொல்லி ஆய்வுகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் 1990-களில் துவாரகையிலும் இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பணப்பற்றாக்குறை ஏற்படவேயில்லை. ஆனால் துவாரகையில் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. பூம்புகாரில் முதற்கட்ட சோதனைகளின்போதே சான்றுகள் கிடைத்தன.
பூம்புகாரின் ஆய்வுகள் தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்பதற்காக நிறுத்தப்பட்டதா? 
இங்கிலாந்தினைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான்காக். இவர் உலகெங்கும் பயணம் செய்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருபவர். நிதிப்பற்றாக்குறையினால் ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதை அறிந்த அவர் இந்தியக் கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களின் நிதியுதவியோடு 2001-ல் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

அதிநவீன உபகரணங்களோடு செய்யப்பட்ட அந்த ஆராய்ச்சியில் பூம்புகாரின் கடற்பகுதியில் மூன்று கிலோமீட்டர்கள் தொலைவில் சுமார் எழுபத்தைந்து அடிகளுக்குக் கீழே ஒரு பிரம்மாண்டமான நகரம் மூழ்கியிருப்பது தெரியவந்தது. ஆங்கில எழுத்தான ‘U’ போன்ற அல்லது குதிரையின் லாடம் போன்ற ஒழுங்கற்ற வடிவத்தில் உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களும் இடிபாடுகளுடன் காணப்பட்டன.

இந்த அகழ்வு ஆய்வினைப்பற்றிய ஆவணப்படங்கள் வெளிநாடுகளின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்தின் தர்ஹாம் பல்கலைக்கழகமும் இந்த ஆய்வின் முடிவுகளை ஏற்றுக்கொண்டுள்ளது.
இங்கு மேலும் ஆராய்ந்தால் இன்னும் பல அரிய உண்மைகள் வெளிவரும்.  இந்த இடத்தை ஏன் ஆராயாமல் விட்டுவைத்திருக்கிறார்கள் என்பது புதிராக இருக்கிறது என்று கூறுகிறார் அவர். கிரஹாம் ஹான்காக்கின் ஆராய்ச்சிகளுக்குப் பிறகும் நமது இந்திய அரசு மேற்கொண்டு எந்த வித ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இந்த ஆவணப்படமும் இந்தியத் தொலைக்காட்சிகளில் காட்ட அனுமதி மறுக்கப்பட்டது.

நமது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகள் தொடர்பான செய்திகள் தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. இது தவிர மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும் தமிழகத்தின் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
நமது வரலாறு திட்டமிட்டே மறைக்கப்படுகின்றனவா என்கிற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.
கடலின் சிறிது தொலைவில் செய்யப்பட்ட ஆய்வுகளே பூம்புகாரின் காலம் 9500 ஆண்டுகளுக்கு முன் என்கின்றன. யார் கண்டார்..? இன்னும் ஆய்வுகளை விரிவாக்கினால் உலகத்தின் வரலாறே திருத்தப்படலாம்.
ஒரு மாபெரும் நகரமே வரலாற்றுப் புதையலாய் கடலோரத்தில் புதைந்து கிடக்கிறது. அந்த நகரைப்பற்றிப் புகழ்ந்து பாடிய பட்டினப்பாலை என்ற நூல் நம்மிடத்தில் இருக்கிறது. ஆனால், அந்த நகரமோ கடலின் அடியில் வரலாற்றை அசை போட்டபடி காத்திருக்கிறது.
அண்ணன் ராஜ்சிவா "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?" என்ற ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அவர் கேட்டிருந்தது வேற்றுக்கிரக வாசிகளைப் பற்றிய தகவல்களை நம்மிடமிருந்து மறைக்கப்படுகின்றதா என்று.
ஆனால் இந்த உண்மைகள் ஏன் மறைக்கப் படுகின்றன?